கரூர் அருகே பரபரப்பு: தாறுமாறாக ஓடிய கார் மோதி ஆசிரியர் பலி 4 பேர் படுகாயம்




கரூர் அருகே தாறுமாறாக ஓடிய கார் மோதி ஆசிரியர் பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சரக்கு ஆட்டோ மீது கார் மோதல்

கரூர் தாந்தோணிமலையை சேர்ந்தவர் பிரதாப் (வயது 40). இவர் கரூரை அடுத்துள்ள ஆத்தூர் அருகே உள்ள அரசு பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று மதியம் பிரதாப் ஆத்தூர் அருகே உள்ள கரூர்-ஈரோடு சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது கரூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் விஜயகுமார் (50) என்பவர் காரை ஓட்டி வந்தார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது.

5 பேர் படுகாயம்

பின்னர் மோதிய வேகத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆசிரியர் பிரதாப் மற்றும் அதேபகுதியை சேர்ந்த மதியழகன், முத்துக்குமார், சிவா ஆகிய 4 பேரும் மீதும் மோதி நின்றது. இதில் பிரதாப், மதியழகன், முத்துக்குமார், சிவா மற்றும் காரை ஓட்டி வந்த விஜயகுமார் ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. மேலும், சரக்கு ஆட்டோ கவிழ்ந்து அதில் இருந்த வெங்காயம் சாலையின் நடுவே சிதறி கிடந்தன. மேலும் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்தது.

ஆசிரியர் பலி

இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரதாப் பரிதாபமாக இறந்தார்.

மற்ற 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து எப்படி நடந்தது என்று அந்த பகுதியில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments