திருச்சியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது அரிஸ்டோ இரயில்வே மேம்பாலம் அமைச்சர் K.N நேரு திறந்து வைத்தார்!





திருச்சியில் கடந்த 8 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த  அரிஸ்டோ மேம்பாலம் இன்று அதிகாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத்  திறக்கப்பட்டது. 

திருச்சி மாநகரில் மிகவும்  பழமையான, அகலம் குறைந்த திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக, புதிய மேம்பாலம் அமைக்கும் பணி (அரிஸ்டோ மேம்பாலம்) கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. ரூ. 81 கோடி திட்ட மதிப்பில் 2 கட்டங்களாக பாலத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. 

இதில் முதல் கட்டமாக அரிஸ்டோ ரவுண்டானாவை மையமாக வைத்து திண்டுக்கல் சாலை, மத்திய பஸ் நிலைய பகுதி, ஜங்ஷன் ரெயில் நிலையம், மதுரை சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் பாலம் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் சென்னை-மதுரை சாலையை இணைக்கும் வகையிலான மன்னார்புரம் பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான நிலம் உள்ளது. 

அந்த இடத்தை கொடுக்க ராணுவ அமைச்சகம் மாற்று இடம் கேட்டது. ஆனால், ராணுவ அமைச்சகம் கேட்ட இடத்தில், மாற்று நிலம் ஒதுக்க தமிழக அரசு தயங்கி வந்தது. எனவே, ராணுவ இடம் ஒப்படைக்கப் படாததால் அந்த பகுதியில் மட்டும் பாலம் அமைக்கும் பணி  நிறைவடையாமல் பல ஆண்டுகளாக கிடந்தது. 



அதே வேளையில் முதல்கட்ட பணியில் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள ஒரு பகுதியை அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ந் தேதியன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த பாலத்தில்  ஜங்ஷன் பகுதியிலிருந்து ஏற முடியாது. இந்தநிலையில் அரிஸ்டோ மேம்பாலத்தில் மன்னார்புரம் செல்லும் வழியில் விடுபட்ட பாலப் பணிகளுக்கான இடத்தினை கொடுக்க ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. 

இதனைத்தொடர்ந்து அரிஸ்டோ மேம்பாலத்தில் விடுபட்ட பாலம் கட்டுவதற்கான பணிகளுக்காக ரூபாய் 3½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் 13 ம் தேதி  பூமி பூஜையுடன் தொடங்கியது. பாலத்தின் பணிகள் தற்போது முழுமையாக முடிக்கப்பட்டது.  

இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை அரிஸ்டோ மேம்பாலம் திறக்கப்பட்டது.  அரிஸ்டோ மேம்பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில்  திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், திருச்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்தியபிரியா, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், பொதுபணிப்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். கடந்த 8 ஆண்டுகளாக கிடப்பில் போட்டபட்ட மேம்பாலம் தற்போது புதுப்பொலிவுடன் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments