திருச்சி டு மதுரை வழித்தடத்தில் மலைகளின் இளவரசி கொடைக்கானலால்‌ தடம் மாறிய ரயில் பாதை: 148 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயருக்காக உருவான கொடைரோடு ரயில் நிலையம்!




திண்டுக்கல்: 148 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் கோடை வாசஸ்தலமான கொடைக்கானலுக்கு செல்ல வசதியாக உருவாக்கியதுதான் கொடைரோடு ரயில் நிலையம்.

சென்னை, திருச்சி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்த ஆங்கிலேயர்கள் ஓய்வெடுக்க கோடை வாசஸ்தலமான கொடைக்கானலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். தாங்கள் குடும்பத்துடன் கொடைக்கானல் செல்ல, கொடைக்கானல் மலைக்கு அருகில் உள்ள பகுதி வரை ரயிலில் சென்று இறங்க ஏதுவாக அம்மைய நாயக்கனூரில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் ரயில்நிலையத்தை அமைத்தனர்.

முறையாக சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் தென்பகுதிக்கு ரயில் வழித்தடம் அமைத்தபோது திருச்சியிலிருந்து மதுரை செல்ல மணப் பாறையை அடுத்து தற்போது பேருந்து வழித்தடம் அமைந்துள்ள கொட்டாம்பட்டி, மேலூர் வழியாகவோ அல்லது துவரங்குறிச்சியில் இருந்து நத்தம் வழியாகவோ மதுரைக்கு ரயில் பாதை அமைப்பதுதான் குறைந்த தூரமாக இருந்தது.

ஆனால், ஆங்கிலேயேர் கொடைக்கானல் செல்ல ஏதுவாக மணப்பாறையில் இருந்து திண்டுக்கல் சுற்றி மதுரை செல்லும் வகையில் ரயில் பாதை அமைக்கப்பட்டது. இதற்குக் காரணம் கொடைக்கானல் செல்ல ஏதுவாக இருக்கும் என்பது தான். 1875-ம் ஆண்டு அம்மையநாயக்கனூரில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. கொடைக்கானல் செல்வோர் இறங்கும் இடம் என்பதால், ‘கொடைக்கானல் சாலை’ ரயில் நிலையம் என ஆங்கிலேயர் பெயர் வைத்தனர்.

ரயில் நிலையம் அமைத்தபோது அருகே குடியிருப்புகள் எதுவும் இல்லை. பின் நாட்களில் ரயில் நிலையத்துக்குப் பயணிகள் வந்து சென்றதையடுத்து கடைகள், குடியிருப்புகள் அமைக்கப்பட்டு ஊர் உருவானது. கொடைக்கானல் சாலை ரயில் நிலைய பெயரை காலப்போக்கில் சுருக்கி ‘கொடை ரோடு’ என மக்கள் அழைக்கத் தொடங்கினர். சென்னையில் இருந்து தென்பகுதிக்கு செல்லும் அனைத்து ரயில்களும் கொடைரோடு ரயில் நிலையத்தில் நின்று சென்றன.

கொடைரோடு ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து காரில் கொடைக்கானல், மூணாறு பகுதிக்குச் சென்று வந்தனர். மேலும் சிறுமலை அடிவாரத்தில் விளைந்த திராட்சை, நிலக்கோட்டை பகுதியில் விளைந்த பூக்கள், வத்தலகுண்டு பகுதியில் விளைந்த வெற்றிலை மற்றும் விவசாய விளை பொருட்களையும் சென்னை உள்ளிட்ட பிற நகரங்களுக்கு அனுப்ப கொடைரோடு ரயில் நிலையம் பெரிதும் உதவியாக இருந்தது.

தற்போது வாகனங்கள் அதிகரிப்பு, எளிதான விமானப் பயணம் என தொலைதூரத்தில் இருந்து கொடைக்கானல் செல்வோர் தங்கள் வழித் தடத்தை மாற்றத் தொடங்கி விட்டனர். இதனால் கொடை ரோடு ரயில் நிலையத்தில் பயணிகள் வருகை படிப்படியாக குறையத் தொடங்கியது. 148 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரிய ரயில் நிலையம் தற்போது களையிழந்து விட்டது.

கார்களில் செல்வோர் மதுரை அல்லது திண்டுக்கல் வழியாக சாலை மார்க்கமாக கொடைக்கானல் செல்கின்றனர். விமானத்தில் மதுரைக்குச் சென்று அங்கிருந்து காரில் கொடைக்கானல் செல்வோரும் உண்டு.

மக்களின் பயண வழி மாற்றம் காரணமாக கூட்டம் குறைந்ததால், கொடைரோடு ரயில்நிலையத்தில் நின்று சென்ற ரயில்கள் ஒவ்வொன்றாக எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் நிற்காமல் செல்லத் தொடங்கின. மிகக்குறைந்த எண்ணிக்கையிலான ரயில்களே நின்று சென்றன. கரோனா காலத்தில் ரயில்கள் கொடைரோடு ரயில் நிலையத்தில் நின்று செல்வது முற்றிலும் குறைக்கப்பட்டது.

தற்போது நிறுத்தப்பட்ட ரயில்கள் ஒவ்வொன்றாக மீண்டும் நின்று செல்ல திண்டுக்கல் எம்.பி. ப.வேலுச் சாமி உள்ளிட்டோர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ரயில்வே அமைச்சரை சந்தித்து எம்பி மனு அளித்தார். அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுத்தாலே, 140 ஆண்டுகால பாரம்பரிய மிக்க ரயில் நிலையம் முன்புபோல புதுப்பொலிவுடன் செயல்பட வாய்ப்புள்ளது என்கின்றனர் ரயில் பயணிகள்..

News Credit : The Hindu Tamil 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments