மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யவேண்டுமா? தமிழகத்தில் 24-ந்தேதி முதல் ஒரு மாதம் சிறப்பு முகாம் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நடைபெறுகிறது




மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம், வருகிற 24-ந்தேதி முதல் ஒருமாத காலம் அனைத்து மின்வாரிய பிரிவு அலுவலகங்களிலும் நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மின் இணைப்புகளில் பெயர் மாற்றம்

தமிழ்நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும்போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கிட, கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் வழங்கிட வேண்டும் என்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், தமிழ்நாடு முழுவதும் உள்ள வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புதாரர்களுக்காக சிறப்பு பெயர் மாற்றம் முகாம், வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் ஒரு மாதகாலம் வரை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள வீட்டு மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் பெறுவதற்கு தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இணையதளத்தில் விண்ணப்பித்து அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களைச் செலுத்தி பெயர் மாற்றம் செய்துகொள்ளும் வசதி நடைமுறையில் உள்ளது.

சிறப்பு முகாம்

ஆனாலும், மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கி, கட்டணம் செலுத்திய அன்றே உடனடியாக பெயர் மாற்றம் வழங்க இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் ஞாயிற்றுகிழமை மற்றும் பண்டிகை தினங்கள் தவிர்த்து அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புக்கான பெயர் மாற்றம் தேவைப்படும் பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு சிறப்பு முகாம்களில் தங்களது வீட்டு மின் இணைப்புகள் மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யலாம். அந்தவகையில் கீழ்கண்ட அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்து, நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணமான ரூ.726 செலுத்தி இந்த முகாமின் மூலம் வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர் தேவையான ஆவணங்களுடன் பிரிவு அலுவலகத்தில் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் வருமாறு:-

* ஆதார் அட்டை, நகராட்சி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரி ரசீது நகல் அல்லது விற்பனைப் பத்திரத்தின் ஜெராக்ஸ் நகல் அல்லது ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம் (பரிசு பத்திரம் / செட்டில்மென்ட் பத்திரம் போன்றவை) அல்லது நீதிமன்ற உத்தரவு.

* நகராட்சி, மாநகராட்சி அல்லாத இதர பகுதிகளுக்கு விற்பனைப் பத்திரத்தின் நகல் அல்லது ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம் (பரிசு பத்திரம் / செட்டில்மென்ட் பத்திரம் போன்றவை) அல்லது நீதிமன்ற உத்தரவு. இறப்பின் காரணமாக பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:- செட்டில்மென்ட் பத்திரம் அல்லது பகிர்வு பத்திரம் சமர்ப்பிக்கப்படாவிட்டால், சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழின்படி அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளின் பெயர்களிலும் பெயர் மாற்றம் செய்யப்படும்.

* ஆதார் அட்டை, நகராட்சி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரி ரசீது நகல் அல்லது உரிமை ஆவணத்தின் நகல்.

* நகராட்சி, மாநகராட்சி அல்லாத இதர பகுதிகளுக்கு உரிமை ஆவணத்தின் நகல்.

பில்டர்கள், டெவலப்பர்களுக்கு...

குழு வீடுகளில் பொது சேவைகளுக்கான மின் இணைப்புகளில் (வீதப்பட்டி - ஐ.டி.) பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள்:- பில்டர்கள், டெவலப்பர்கள் பெயரில் இருக்கும் பல குடியிருப்புகள் - குடியிருப்பு வளாகங்கள் - குரூப் ஹவுஸிங்கில் உள்ள பொது சேவைகளுக்கான மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய விரும்புவோர் நலவாழ்வு சங்கத்தின் பெயரில் பதிவு சான்றிதழ் அல்லது வளாகம், அப்பார்ட்மெண்ட் பெயருக்கு மாற்ற, விண்ணப்பத்தில் கையொப்பமிட குடியிருப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ கடிதம் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments