அம்மாபட்டினத்தில் ஆண்கள் நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படுமா? பொதுமக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம் கோரிக்கை!



அம்மாபட்டினத்தில் ஆண்கள் நடுநிலைப்பள்ளியை உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்மாபட்டினம் ஊராட்சி மக்கள் தொகை அதிகம் வசிக்கும் பெரிய ஊராட்சியாகும். இந்த ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இங்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இங்கு அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளியும், பெண்கள் மேல்நிலைப்பள்ளியும், பெண்கள் தொடக்கப்பள்ளியும் உள்ளன. 
இந்த பள்ளிகளில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். கடந்த 8 ஆண்டுகளாக 8-ம் வகுப்பு தேர்வில் ஆண்கள் நடுநிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது. விளையாட்டு மற்றும் கற்றல் திறனடைவில் மாணவர்கள் சிறப்பிடம் பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, 9-ம் வகுப்பு படிக்க மாணவர்கள் மணமேல்குடி அல்லது அறந்தாங்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் சிலர் மேற்கொண்டு படிக்காமல் தங்களது படிப்பை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். இதனால் இப்பகுதியில் உள்ள மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

அம்மாபட்டினத்தில் 1920-இல் (100 ஆண்டுகள் நிறைவு) தொடங்கப்பட்ட அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இந்த பள்ளி செயல்படும் கட்டிடம் பழைய கட்டிடம் ஆகும். இந்த கட்டிடத்தில் தான் பள்ளி இயங்கி வருகிறது. கழிப்பறை மிகவும் மோசமாக உள்ளது.

தற்சமயம் சுமார் 195 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டால் சுமார் 600 மாணவர்கள் கூடுதலாக இப்பள்ளியில் சேர்த்து படிக்க வாய்ப்பு உள்ளது. இந்த பள்ளியில் கழிவறை வசதி ஏற்படுத்தி கொடுக்க கோரிக்கை வைக்கிறோம். 
போதுமான இருக்கை வசதி இல்லாததால் முன்னாள் மாணவர்கள் சார்பாக டெஸ்க், பெஞ்ச் பதினாறு செட் வாங்கி கொடுத்துள்ளனர். அதில் தான் தற்போது மாணவர்கள் அமர்ந்து படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் நிதியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு அமைத்து சிறப்பாக இயங்குகிறது.

எனவே அரசு பள்ளிக்கு போதுமான கட்டிட வசதியும் மற்றும் நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

News Credit: Sathar Ammapattinam 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments