மகளிர் உரிமைத்திட்டத்தில் தகுதி பெறாத குடும்பத்தலைவிகள் மேல்முறையீடு செய்யலாம் தமிழக அரசு அறிவிப்பு




மகளிர் உரிமைத் திட்டத்தில் தகுதியின்மைக்கு ஆளான குடும்பத் தலைவிகள் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது..

பெண்கள் மேம்பாடு

குடும்பத்திற்காக அயராது உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்திற்காக குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்க, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது.

இந்த திட்டத்தில் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெற கடந்த ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 4-ந் தேதி வரை முதல் கட்டமாகவும், ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை 2-வது கட்டமாகவும், இந்த 2 கட்டங்களிலும் விடுபட்டவர்களுக்கு ஆகஸ்டு 18-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை சிறப்பு முகாம் வழியாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டும், அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த ஒரு கோடியே 6 லட்சத்து 500 மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

மேல்முறையீடு

கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதாரர்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்களும் ஏற்கப்படவில்லை. விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு 18.9.2023 முதல் அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள், மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும்.

புகார்கள்

வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு அலுவலராக செயல்படுவார். இணையதளம் மூலம் செய்யப்படும் மேல்முறையீடுகள், அரசு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். வருவாய் கோட்டாட்சியர், மேல்முறையீட்டு விண்ணப்பங்களைத் தீர்வு செய்ய கள ஆய்வு தேவைப்படும் நேர்வுகளில், சம்பந்தப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்கள் வழி கள ஆய்வு அறிக்கையைப் பெற்று விசாரணை செய்வார். இந்த மேல்முறையீடு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வழியாக மட்டுமே செய்யப்படும்.

பயனாளிகளின் தகுதி மற்றும் தகுதியின்மைகள் தொடர்பாக தனி நபர்களின் மூலம் வரப்பெறும் புகார்கள் குறித்த விசாரணை அலுவலராக வருவாய் கோட்டாட்சியர் செயல்படுவார். இணையதளம் வழியாகப் பெறப்படும் புகார்கள் மீது, மேல்முறையீட்டு மனுக்களுக்கு பின்பற்றப்படும் அதே நடைமுறைகளைப் பின்பற்றி விசாரிக்கப்படும்.

இந்த தகவலை சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அரசு செயலாளர் வெளியிட்டுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments