‘‘விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை’’ 22 ஆயிரம் வழக்குகள் நிலுவை; சமரசமாக பேசினால் எளிதில் தீர்வு மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி பேச்சு




விட்டுக்கொடுப்பவர்கள், கெட்டுப்போவதில்லை எனவும் மாவட்டத்தில் 22 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், சமரசமாக பேசினால் வழக்குகள் எளிதில் தீர்வு காணப்படும் என மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி பூரண ஜெய ஆனந்த் தெரிவித்தார்.

மக்கள் நீதிமன்றம்

புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், குடும்ப நல வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் புதுக்கோட்டை கோர்ட்டில் நேற்று நடைபெற்றது. இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான பூரண ஜெய ஆனந்த் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. அனைத்து வழக்குகளையும் ஒரே நேரத்தில் முக்கியத்துவம் கொடுத்து முடித்து விட முடியாது. கால விரயமும், பொருள் விரயமும் தவிர்க்கப்பட வேண்டும். "விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை'' அந்த அடிப்படையில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சமரசமாக பேசினால் வழக்குகள் எளிதில் தீர்மானிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்.

சமரசத்தினால் தீர்வு

"சாட்சிக்காரர் காலில் விழுவதை விட சண்டைக்காரர் காலில் விழுவதே மேல்" என முதுமொழி உண்டு. அதன் அடிப்படையில் இருதரப்பினர்கள் ஒருவக்கொருவர் விட்டுக்கொடுத்து தங்களது எதிர்தரப்பினர்களுடன் சமரசம் பேச முற்பட்டாலே அவர்களுக்கிடையேயான அனைத்து பிரச்சினைகளும் இறுதியாகவும், சுமூகமாகவும் தீர்க்கப்பட்டு விடுகிறது. சமரசத்தீர்வினால் மேல்முறையீடு இல்லாமல் வழக்கு இறுதி நிலையை அடைகிறது. நீதிமன்ற கட்டணமும் திரும்பப் பெறப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் புதுக்கோட்டை மாவட்ட குடும்ப நல நீதிபதி ஜெயந்தி, கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி வசந்தி, அத்தியாவசிய பண்டங்கள் சிறப்பு மாவட்ட நீதிபதி பாபுலால், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலாளர் ராஜேந்திர கண்ணன், முதன்மை சார்பு நீதிபதி மற்றும் தலைமை குற்றவியல் நீதிபதி (பொறுப்பு) சசிக்குமார், நீதித்துறை நடுவர் எண்-1 நீதிபதி ஜெயந்தி ஆகிய நீதிபதிகள் கொண்ட 5 அமர்வுகள் மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் தலா ஒரு அமர்வு என மொத்தம் 11 அமர்வுகளில் நடைபெற்றது.

119 வழக்குகள் சமரச தீர்வு

நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகள், குடும்ப நல வழக்குள், வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி மற்றும் வங்கி வராக்கடன் வழக்குகள் என மொத்தம் 1,708 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 119 வழக்குகள் தீர்வு காணப்பட்டன. இதில் ரூ.2 கோடியே 15 லட்சத்து 76 ஆயிரத்து 121 தொகைக்கான சமரச முடிவு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.

குடும்ப வாழ்க்கை வெற்றியின் ரகசியம்
குடும்ப நல வழக்கில் கணவன்-மனைவி இருவரை சேர்த்து வைத்த பின் மாவட்ட முதன்மை நீதிபதி பூரண ஜெய ஆனந்த் பேசுகையில், "குடும்பத்தில் பிரச்சினைகள் வராமல் இருக்க மனைவியிடம் கணவர் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். மனைவியிடம் `சரி' அல்லது `சாரி' என்ற வார்த்தையை கணவர் பயன்படுத்தி கொண்டால் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். குழந்தைகளின் வாழ்க்கையும் நன்றாக இருக்கும். சரி, சாரி என 2 வார்த்தைக்கும் இடையே உள்ள ஒரு துணைக்கால் எழுத்து தான் வாழ்க்கைக்கு துணையாக இருக்கும். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களில் ரகசியம் இது தான். தாரக மந்திரமாக இதனை கடைப்பிடித்தால் போதும்'' என்றார். இதனை கடைப்பிடிக்கும் படி சேர்ந்த தம்பதியின் கணவரிடம் நீதிபதி கூறி வாழ்த்தி அனுப்பி வைத்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments