தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது இந்திய கடலோர காவல் படை நடவடிக்கை




இந்திய கடல் பகுதிக்குள் வந்து தனுஷ்கோடி அருகே மீன்பிடித்த இலங்கையை சேர்ந்த 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை மீனவர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த, இந்திய கடலோர காவல் படையினர் ஹோவர் கிராப்ட் கப்பலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கும், 6-வது மணல் திட்டு பகுதிக்கும் இடைப்பட்ட இந்திய கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, 5-வது மணல் திட்டு அருகே பிளாஸ்டிக் படகு ஒன்று வந்து கொண்டிருந்தது. அதை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்த படகில் 5 பேர் இருந்தனர். விசாரணையில், இலங்கை மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பிளாஸ்டிக் படகு என்பதும், அதில் இருந்த மீனவர்கள் தலைமன்னார் பகுதியை சேர்ந்த அப்துல் ஹமீது(வயது 40), அகமது ரக்சன்(27), அருள் பிரசாத்(25), அஜித்(25), விமல்(26) என்றும் தெரியவந்தது.

கைது

இவர்கள் நேற்று காலையில் பிளாஸ்டிக் படகில் மீன்பிடிக்க புறப்பட்டதும், கடல் நீரோட்டம் மற்றும் காற்றின் வேகத்தால் இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடிக்க வந்து விட்டதாக இ்ந்திய கடலோர காவல் படையினரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து படகுடன் 5 பேரும் ராமேசுவரம் கடலோர போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் 5 பேரையும் மண்டபம் கடலோர காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்களது படகு பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments