இளம்வயதினரின் திடீர் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசி காரணமா? ஐ.சி.எம்.ஆர். ஆய்வு முடிவு வெளியீடு




இளம்வயதினரின் திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதுதான் காரணமா என்பது குறித்து ஐ.சி.எம்.ஆர். நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

நாடு முழுவதும் ஆய்வு

கடந்த 2 ஆண்டுகளில், நல்ல ஆரோக்கியத்துடன் திகழ்ந்த இளம்வயதினர் திடீரென மரணம் அடையும் சம்பவங்கள் ஏராளமாக நடந்துள்ளன. அவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதோ அல்லது கொரோனா பெருந்தொற்றில் சிக்கி குணமடைந்ததோ காரணமாக இருக்கலாம் என்ற யூகங்கள் பரவி வருகின்றன.

எனவே, இதுதொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வு காண இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) ஒரு ஆய்வு நடத்தியது. நாடு முழுவதும் 47 ஆஸ்பத்திரிகள் இதில் பங்கேற்றன.

கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி முதல் 2023-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்குள், விளக்க முடியாத காரணங்களால் மரணம் அடைந்த 18 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆரோக்கிய நபர்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு ஆரோக்கியமாக இருந்தவர்கள் ஆவர்.

அவர்களின் மருத்துவ ஆவணங்களை படித்தும், அவர்களுடைய குடும்ப உறவினர்களிடம் தகவல் திரட்டியும் ஆய்வு நடத்தப்பட்டது.

தடுப்பூசி காரணம் இல்லை

இதில், திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை என்று தெரிய வந்தது. இதுகுறித்து ஐ.சி.எம்.ஆர். தனது ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இளம்வயதினரின் திடீர் மரணங்களுக்கும், கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரத்தையும் நாங்கள் கண்டறியவில்லை. அதற்கு மாறாக, இந்த வயதினரின் திடீர் மரணங்களுக்கான ஆபத்தை கொரோனா தடுப்பூசி உண்மையிலேயே குறைத்துள்ளது.

குடும்ப பின்னணி

திடீர் மரணங்களை சந்தித்த குடும்ப பின்னணி, கொரோனா தொற்றுக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது, அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம், தீவிரமான உடல் செயல்பாடுகள் போன்ற வாழ்க்கை முறை ஆகியவைதான் திடீர் மரணங்களுக்கான ஆபத்து காரணிகளாக உள்ளன.

இந்த பழக்கங்களை மாற்றிக்கொள்வது, இளம்வயதினரின் திடீர் மரணங்களுக்கான ஆபத்தையும் குறைக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments