கறம்பக்குடி அருகே சாலை வசதி கேட்டு மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் கைது




கறம்பக்குடி அருகே சாலை அமைக்கக்கோரி மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

குண்டும், குழியுமான சாலை

கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரியில் பிரசித்தி பெற்ற சுகந்த பரிமளேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருமணஞ்சேரியை சுற்றி 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

அரசு உயர்நிலை, நடுநிலை பள்ளிகள் உள்ளன. இப்பகுதியில் இருந்து ஏராளமான மாணவ- மாணவிகள் கறம்பக்குடி, ஆலங்குடி, புதுக்கோட்டை, பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். ஆனால் கறம்பக்குடி- திருமணஞ்சேரி விலக்கு சாலையிலிருந்து கருக்காக்குறிச்சி வரை செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி பஞ்சராகி நடுவழியில் நின்று விடுகின்றன. இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சாலை மறியல்

இந்த சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திருமணஞ்சேரி சுற்றுவட்டார கிராம மக்கள் நேற்று காலை திருமணஞ்சேரி விலக்கு சாலை அருகே கறம்பக்குடி- புதுக்கோட்டை பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக் ரஜினி, கறம்பக்குடி தாசில்தார் நாகநாதன், வட்டார வளர்ச்சி அதிகாரி ரமேஷ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments