கீழக்கரை அருகே விபத்து: சாலையோரம் நின்ற லாரி மீது பஸ் மோதி அய்யப்ப பக்தர் பலி 14 பேர் படுகாயம்




சாலையோரம் நின்ற லாரி மீது பஸ் மோதி அய்யப்ப பக்தர் பலியானார். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

அய்யப்ப பக்தர்கள்

கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் மற்றும் டிரைவர், உதவியாளர் உள்பட 49 பேர் சபரிமலைக்கு பஸ்சில் புறப்பட்டனர். தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு சென்று தரிசித்துவிட்டு, பின்னர் சபரிமலை செல்லும் வகையில் யாத்திரை மேற்கொண்டு வந்தனர்.

அதன்படி திருச்செந்தூர் சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு ராமேசுவரத்திற்கு பஸ்சில் புறப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே புல்லந்தை கிழக்கு கடற்கரை சாலையில் அந்த பஸ் வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் புல்லந்தை அருகே சாலையோரத்தில் ஒரு லாரி நிறுத்தப்பட்டு இருந்தது.

பக்தர் பலி

அய்யப்ப பக்தர்கள் வந்த பஸ், எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்ற லாரி மீது மோதியது. இதில் பஸ்சின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. மேலும் அதில் இருந்த பெல்லாரியை சேர்ந்த சந்தீபா (வயது 25) என்ற பக்தர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் 14 அய்யப்ப பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டனர். கீழக்கரை தன்னார்வலர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments