உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை வேளாண் அதிகாரி எச்சரிக்கை




உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உரங்கள் இருப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், மக்காச்சோளம், நிலக்கடலை, தென்னை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

யூரியா 6,992 டன்கள், டி.ஏ.பி. 783 டன்கள், பொட்டாஷ் 1,603 டன்கள் மற்றும் காம்பளக்ஸ் உரங்கள் 5,350 டன்கள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மொத்த மற்றும் சில்லறை உர விற்பனை உரிமம் பெற்ற விற்பனையாளர்கள், வெளி மாவட்டங்களுக்கு மானிய உரங்களை ஏற்றுமதி செய்யவோ அல்லது வெளி மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்யவோ கூடாது. விவசாயம் மேற்கொள்ளாதவர்களுக்கு உரம் விற்பனை செய்யக்கூடாது.

கடும் நடவடிக்கை

விற்பனை முனையக்கருவி மூலம் மட்டுமே உரம் விற்பனை மேற்கொள்ள வேண்டும். விற்பனை முனையக்கருவியில் உள்ள இருப்பும், உண்மை இருப்பும் மற்றும் புத்தக இருப்பும் சரியாக இருக்க வேண்டும். திடீர் ஆய்வின் போது குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உரக்கட்டுப்பாட்டு ஆணையின் படி விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.

உர மூட்டையின் மேல் காணப்படும் அதிகபட்ச விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திலோ அல்லது மாவட்ட உர கண்காணிப்பு மையத்தினை 04322- 221666 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

எனவே, புதுக்கோட்டை மாவட்ட உர விற்பனையாளர்கள் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments