ராமநாதபுரத்தில் 6 ஆண்டுகள் ஆகியும் முடிவடையாத ரெயில்வே மேம்பால பணி




ராமநாதபுரத்தில் 6 ஆண்டுகளை கடந்தும் இதுவரை ரெயில்வே மேம்பால பணிகள் முடிவடையாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

மேம்பாலம்

ராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் ரெயில்வே கேட் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அதிக போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை தடுக்க ரெயில்வே கேட் பகுதியில் புதிய சாலை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ரெயில்வே சாலை மேம்பாலம் அமைக்க நில ஆர்ஜிதத்திற்கு ரூ.5.14 கோடி, கட்டுமான பணிகளுக்கு ரூ.25.60 கோடி என மொத்தம் ரூ.30.74 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த மேம்பாலமானது, மொத்தம் 719.60 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படுகிறது. அதேபோல, பாலத்திற்கான அணுகு சாலை இருபுறமும் சேர்த்து மொத்தம் 379 மீட்டர் நீளம், 5.50 மீட்டர் அகலம் அமைக்கப்படவுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு அடிக்கல் நாட்டி தொடங்கப்பட்ட பணிகள் பல்வேறு காரணங்களால் தாமதமானது.

பணிகளில் தொய்வு

பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் துரித நடவடிக்கையின் பயனாக சாலையின் இருபுறங்களிலும் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. தடையாக இருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்ட நிலையில் பாலம் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன. பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள பகுதியில் சாலையின் இருபுறமும் பாலத்திற்கான தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு அணுகு சாலை தார்ச்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர ரெயில்வே தண்டவாள பகுதியில் இருபுறமும் ரெயில்வே நிர்வாகத்தின் சார்பில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தொடர் கண்காணிப்பு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் ஆய்வு இன்மை காரணமாக கடந்த பல நாட்களாக பால பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

6 ஆண்டுகளாக

சிறிய அளவிலான பணிகள் பெயரளவில் நடைபெற்று வருகின்றன. 2 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்ட பால பணிகள் 6 ஆண்டுகளை கடந்தும் இன்றளவும் மொட்டை பாலமாகவே காட்சி அளிக்கிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட பால பணிகளை தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஒரு சில மாதங்களில் முடிப்போம் என்று தேர்தல் வாக்குறுதிபோல அளிக்கப்பட்ட நிலையில் இன்றளவும் பணிகள் முடிவடையாமல் உள்ளது.

இதன்காரணமாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு 6 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் சொல்ல முடியாத அவதி அடைந்து வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments