புதுக்கோட்டையில் மாணவர்களுக்கு ரூ.18½ கோடி கல்விக்கடன் வழங்கல் கலெக்டர் தகவல்




புதுக்கோட்டையில் ரூ.18½ கோடிக்கு மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் கூறினார்.

கல்விக்கடன்

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து மாபெரும் சிறப்பு கல்விக்கடன் முகாம் நடத்தியது. முகாமை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா துவக்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கடன் உதவித்தொகைக்கான ஆணைகள் மற்றும் காசோலைகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:- இந்த சிறப்பு கல்விக்கடன் முகாமில், மாவட்டத்திற்குள் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள், புதுக்கோட்டை மாவட்டத்தை இருப்பிடமாக கொண்டு மற்ற மாவட்டங்களில், மற்ற மாநிலங்களில், வெளிநாடுகளில் பயின்று கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள் கல்விக்கடன் பெற தகுதியுடையோர் ஆவர். மேலும் மாணவ, மாணவிகள் கல்விக்கடனுக்கு புதிதாக விண்ணப்பிக்க மற்றும் இதர சான்றிதழ்களை பெற கல்லூரி வளாகத்திலேயே இ-சேவை மைய வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

128 மாணவர்களுக்கு...

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ரூ.18 கோடியே 69 லட்சம் மதிப்பீட்டில் வங்கிகளின் மூலம் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இம்முகாமில் கல்விக்கடனுக்கு விண்ணப்பித்த 128 மாணவ, மாணவிகளுக்குரூ.6 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வங்கி கிளைகளின் மூலம் வழங்கப்பட உள்ளது.

எனவே மாணவ, மாணவிகள் அனைவரும் இம்முகாமினை பயன்படுத்திக் கொண்டு வங்கிகளின் மூலம் கல்விக்கடன் பெற்று தங்களின் உயர் கல்வி பயிலும் கனவினை நனவாக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

இதில் மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments