தஞ்சாவூர்-விழுப்புரம் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கக்கோரி வழக்கு ரெயில்வே அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு




தஞ்சாவூர்-விழுப்புரம் இடையே இரட்டை அகல ரெயில் பாதை அமைக்கக்கோரிய வழக்கு குறித்து ரெயில்வே அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

வழிபாட்டு நகரங்கள்

தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிகோட்டையைச் சேர்ந்த ஜீவகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

ரெயில்வே பயணிகள் பொது சேவை நலச்சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். விழுப்புரத்தில் இருந்து தஞ்சாவூர் வரை தற்போதுள்ள ஒற்றை அகல ரெயில் பாதை, மெயின் லைன் பிரிவு என அழைக்கப்படுகிறது. இது சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம் போன்ற பல்வேறு வழிபாட்டு நகரங்களை இணைக்கிறது. இந்த பகுதியில் ஏராளமானவர்கள் ரெயில் பயணத்துக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். ரெயில்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.

டெல்டா மாவட்டத்தில் கணிசமான எண்ணிக்கையில் சிமெண்டு உற்பத்தி உள்ளிட்ட தொழிற்சாலைகள் உள்ளன.

இரட்டை பாதை

சிமெண்டு, நிலக்கரி மற்றும் நெல், கரும்பு போன்ற விவசாய விளைபொருட்கள், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி உள்ளிட்ட பொருட்கள் மெயின் லைன் வழியாக கொண்டு செல்லப்படுகின்றன. இதற்காக பயணிகள், சரக்கு ரெயில் வசதி அதிகளவில் தேவைப்படுகிறது. ஏற்கனவே பொன்மலை (திருச்சி) முதல் தஞ்சாவூர் வரையிலான 47 கிலோமீட்டர் தூரத்திற்கு, 350 கோடி ரூபாய் செலவில் இரட்டை ரெயில் பாதை பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

ஆனால் தஞ்சாவூர் முதல் விழுப்புரம் வரையிலான 193 கிலோ மீட்டர் ரெயில் பாதையை இரட்டை பாதையாக மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்த பாதையில் ஒரு ரெயில் செல்லும்போது மற்ற ரெயில்கள் நீண்ட நேரம் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் கடும் பாதிப்பு அடைகின்றனர்.

மேலும் கும்பகோணத்தில் 2028-ம் ஆண்டு மகாமக திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள். எனவே கும்பகோணம் வழி தஞ்சாவூர்-விழுப்புரம் ரெயில்பாதையை இரட்டை வழி அகல பாதையாக மாற்ற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

பதில் அளிக்க உத்தரவு

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கு குறித்து ரெயில்வே அதிகாரிகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments