நெல் விதைகளை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை




நெல் விதைகளை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மெர்சி ரம்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நெல் சாகுபடி

புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா பருவ நெற்பயிர் அறுவடைக்குப்பின் தற்போது கோடை நெல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் நாற்றங்கால் தயார் செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். உணவு தானிய உற்பத்தியில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கோடை பருவ நெல் சாகுபடி பரப்பு 1,300 ஏக்கராக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தனியார் விதை விற்பனையாளர்கள் சான்று விதைகளில் வெள்ளை அல்லது நீலநிறம் முறையே சான்று அட்டை மற்றும் விவர அட்டை பொருத்தப்பட்ட விதைகளையே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். விவர அட்டையில் பயிர், ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள், பயிர் செய்ய ஏற்ற பருவம், உற்பத்தியாளர் விவரம் உள்ளிட்ட 14 வகையான விவரங்கள் அச்சிடப்பட்டு இருக்க வேண்டும். அதேபோல், கோடை பருவத்துக்கு உகந்த தரமான நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

விற்பனை ரசீது

குறுகிய கால நெல் ரகங்களான ஏடிடீ 36, ஏடிடீ 37, ஏடிடீ 43, ஏடிடீ 45, ஏடிடீ 53, ஏடிடீ 57, கோ 51, ஏஎஸ்டி 16, டிபிஎஸ் 5 போன்ற கோடை பருவத்துக்கு ஏற்ற ரகங்கள், சிறுதானியங்கள், உளுந்து, நிலக்கடலை மற்றும் எள் ஆகியவற்றை தனியார் விதை விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு விதை சட்ட விதிகளின்படி விற்பனை செய்ய வேண்டும். அனைத்து தனியார் விதை விற்பனையாளர்களும், விதை இருப்பு பதிவேடு, கொள்முதல் பட்டியல் மற்றும் முளைப்பு பதிவேடு கட்டாயம் பராமரிக்க வேண்டும்.

குவியல் வாரியாக தனித்தனி பக்கங்களில் விதை இருப்பு விவரங்கள் பதிவிட வேண்டும். தனியார் விதை விற்பனையாளர்கள் விதைகளை விற்பனை செய்யும்போது விவசாயிகளுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும். விற்பனை ரசீதில் விதை ரகம் மற்றும் குவியல் விவரங்கள் அவசியம் குறிப்பிட வேண்டும்.

கடும் நடவடிக்கை

எனவே, கோடை பருவத்துக்கு ஏற்ற, தமிழ்நாடு மாநிலத்தில் சாகுபடி செய்ய அறிவிக்கை செய்யப்பட்ட நெல் ரகங்களை மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய அறிவுறுத்தப்படுகிறது. கோடை பருவத்துக்கு உகந்தது அல்லாத நெல் ரகங்களை விற்பனை செய்தாலோ அல்லது விற்பனையில் விதி மீறல்கள் கண்டறியப்பட்டாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கலெக்டர் மெர்சி ரம்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments