புதிய குடும்ப அட்டை இல்லாவிட்டாலும் ரேசன் கடைகளில் பொருள்கள் பெறலாம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு!




பொது விநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அரிசி உள்ளிட்ட இன்றியமையாப் பொருட்களை நியாயவிலைக் கடைகள் வாயிலாகப் பெற்று பயனுறும் வண்ணம் புதிய குடும்ப அட்டைகள் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 7.5.2021 முதல் 30.6.2023 வரை பதினைந்து இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

நடப்பிலுள்ள குடும்ப அட்டைகள் அடிப்படையில் புதிய நலத்திட்ட உதவிகள் வழங்கிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் பயனாளிகள் எண்ணிக்கையினைச் சமநிலையில் வைக்கும் வண்ணம் குடும்ப அட்டைகள் விநியோகம் செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இடையில் வெள்ளம் பாதித்த தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் 27,577 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.
ஏற்கனவே இணையவழியில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியுடைய 45,509 புதிய குடும்ப அட்டைகள் தற்போது வழங்கப்படுகின்றன. இவர்கள் அனைவருக்கும் அவர்கள் கொடுத்த அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் புதிய குடும்ப அட்டைகளை வட்ட வழங்கல் அலுவலகங்களில் தாங்களோ தங்கள் குடும்ப உறுப்பினர் எவரேனுமோ சென்றுபெற்றுக்கொள்ளலாம். 



இந்தக் குடும்ப அட்டைகள் அட்டைதாரர்களிடம் சேருவதற்கு முன்னரே அட்டைதாரர்கள் அவர்களுக்கான இன்றியமையாப் பண்டங்களை நியாயவிலைக் கடைகளில் பெறும் வகையில் குடும்ப அட்டைகள் செயலாக்கம் செய்யப்பட்டு அந்த விவரம் குடும்ப அட்டை எண்ணுடன் அட்டைதாரர்களின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது. குடும்ப அட்டை எண்ணை கடைப் பணியாளரிடம் தெரிவித்து விரல் ரேகை சரிபார்ப்புக்கு பின்னர் நியாயவிலைக் கடையில் அவர்களுக்கான இன்றியமையாப் பண்டங்களை அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments