புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையத்தில் அவலம்: மின் இணைப்பு இல்லை; கழிவறை குறைபாடுகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!



புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா, குளத்துக்குடியிருப்பு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் கடந்த ஆறு மாதங்களாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால், இதுவரை இந்த சுகாதார நிலையத்திற்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது கடும் வெயில் காலம் நிலவுவதால், மின்சார வசதி இல்லாத காரணத்தால் மருத்துவப் பணிகள் மற்றும் பொதுமக்களுக்கான அடிப்படை சுகாதார சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணிப் பெண்கள், முதியோர்கள் மற்றும் குழந்தைகள் கட்டிடத்திற்குள் அமர முடியாமல், வெளியே வெயிலிலும், மர நிழலிலும் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தரமற்ற கழிவறை வசதிகள்
மேலும், புதிய கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவறைகளில் தண்ணீர் பிளஷ் செய்தால் கழிவுநீர் சரியாக உள்வாங்கப்படாமல் வெளியேறும் அவலம் நீடிக்கிறது. புதிய கட்டிடமாக இருந்தும், கழிவறை வசதிகள் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களும், சுகாதாரப் பணியாளர்களும் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த துணை சுகாதார நிலையத்திற்கு நிரந்தர மின் இணைப்பு வழங்க வேண்டும் எனவும், கழிவறை குறைபாடுகளைச் சீரமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தரமற்ற பணிகளை மேற்கொண்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments