புதுக்கோட்டை மாவட்டத்தில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை




புதுக்கோட்டை மாவட்டத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

4 நாடாளுமன்ற தொகுதிகள்

தொகுதி மறுசீரமைப்பின் போது கடந்த 2009-ம் ஆண்டு முதல் புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி இல்லாமல் போனது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை (தனி), புதுக்கோட்டை, விராலிமலை, ஆலங்குடி, திருமயம், அறந்தாங்கி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளையும் 4 நாடாளுமன்ற தொகுதிகளாக பிரிக்கப்பட்டது.

இதில் கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிகள் திருச்சி நாடாளுமன்ற தொகுதியிலும், விராலிமலை சட்டமன்ற தொகுதி கரூர் நாடாளுமன்ற தொகுதியிலும், ஆலங்குடி, திருமயம் சட்டமன்ற தொகுதிகள் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியிலும், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியிலும் அடங்கும். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 நாடாளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கண்காணிக்கப்படுகின்றன.

தீவிர வாகன சோதனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி 18 பறக்கும் படையினரும், 18 நிலையான கண்காணிப்பு குழுவினரும், 6 வீடியோ கண்காணிப்பு குழுவினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பிரத்தியேகமாக வாகனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் ஜி.பி.எஸ்.கருவி பொருத்தப்பட்டுள்ளது. இவர்களுடன் போலீசாரும் பாதுகாப்பு பணிக்கு செல்கின்றனர்.

இதில் அந்தந்த குழுவினர் நேற்று முன்தினம் மாலை முதல் தங்களது பணியை மேற்கொள்ள தொடங்கினர். இருப்பினும் நேற்று காலை முதல் பறக்கும்படையினரின் வாகன சோதனை தீவிரமானது. வாக்காளர்களுக்கு பணம் கொண்டு செல்லப்படுவதை தடுக்கவும், தேர்தல் விதிகளை மீறி பணம், பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்கவும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் ஆங்காங்கே சாலையில் நின்று வாகனங்களை மறித்து சோதனையிட்டனர். இந்த வாகன சோதனையானது சுழற்சி முறையில் பறக்கும் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments