தேர்தல் விதிமுறைகளின்படி வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் கலெக்டர் மெர்சி ரம்யா அறிவுறுத்தல்




தேர்தல் விதிமுறைகளின் படி வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என கலெக்டர் மெர்சி ரம்யா அறிவுறுத்தினார்.

பயிற்சி வகுப்பு

நாடாளுமன்ற தேர்தலில் புதுக்கோட்டையில் வாக்குச்சாவடியில் பணிபுரிய உள்ள தலைமை அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த பயிற்சியை கலெக்டர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்து பேசினார்.

வாக்குச்சாவடி முகவர்கள், மாதிரி வாக்குப்பதிவு, பச்சை நிற தாள் முத்திரை, வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படும் நபர்கள், தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தியுள்ளபடி அவ்வப்போது செயலி மூலமும், மண்டல அலுவலருக்கும் தகவல் அனுப்புதல், எதிர்க்கப்பட்ட வாக்குகள், ஆய்வுக்குரிய வாக்குகள், வாக்காளர் வாக்களிக்கும் முறை, வாக்குப்பதிவு முடிவுக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டது.

வாக்காளர் பட்டியல்

இதேபோல வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு வாக்காளர் பட்டியலினை சரிபார்த்தல், தேர்தல் பணி சான்று, வாக்காளரின் இடது கை ஆட்காட்டி விரலில் நகத்திற்கும், தோலிற்கும் மத்தியில் அழியாதமை வைத்தல், தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட 12 அடையாள ஆவணங்களின் அடிப்படையில் மட்டுமே வாக்களிக்க அனுமதித்தல், வாக்காளர் எந்த ஆவணத்தை கொண்டு வாக்களித்தார் என்ற விபரத்தை பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டது.

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள், தேர்தல் ஆணைய விதிமுறையின் படி பணியாற்ற வேண்டும். நாடாளுமன்ற பொதுத்தேர்தலினை நேர்மையான முறையில் நடத்திட அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, தாசில்தார் பரணி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதேபோல அறந்தாங்கியில் நடைபெற்ற பயிற்சியை கலெக்டர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments