அறந்தாங்கி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு



அறந்தாங்கி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குடிநீர் கேட்டு...

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே தாந்தாணி ஊராட்சிக்குட்பட்ட சிதம்பரவிடுதி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக அப்பகுதி மக்களுக்கு சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் எரிச்சி-சிலட்டூர் சாலையில் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் மற்றும் போலீசார், தாந்தாணி ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் எரிச்சி-சிலட்டூர் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments