மின் தடை நேரம் குறித்து முன்கூட்டியே குறுந்தகவல் மேற்பார்வை என்ஜினீயர்களுக்கு வாரியம் உத்தரவு




மின்சார நிறுத்தங்களின்போது, மின்சாரம் தடைபடும் நேரம் குறித்து மின்நுகர்வோர்களுக்கு முன்கூட்டியே குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வட்ட மேற்பார்வை என்ஜினீயர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

சீரான மின்சார வினியோகம்

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில், வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் (கூடுதல் பொறுப்பு) பிரதீப் யாதவ் தலைமையில், மாநிலம் முழுவதும் தடையில்லா, சீரான மின்சாரம் வழங்குவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், அனைத்து மின்சார பகிர்மான தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மாநிலத்தின் மின்சார தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த மாதம் 2-ந்தேதி தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு மாநிலத்தின் மின்சார தேவை 20 ஆயிரம் 830 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியது. குறிப்பாக, சென்னை மாவட்டத்தின் உச்சபட்ச மின்சார தேவை, இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்து. அந்தவகையில், கடந்த 31-ந்தேதி 4 ஆயிரத்து 769 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியது. இந்த மின்சார தேவையினை தமிழ்நாடு மின்சார உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், வெளி மின்சார சந்தை, மின்பரிமாற்றம் ஆகியவற்றின் வாயிலாக எந்தவித பற்றாக்குறையும் இல்லாமல் பூர்த்தி செய்யப்பட்டது.

தடையில்லா மின்சாரம்

மாநிலத்தின் மின்சார தேவை மற்றும் மின்சார வினியோகத்தில் எவ்வித இடைவெளியும் இல்லை. மாநிலம் முழுவதும் தடையில்லா, சீரான மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, மின்சார வினியோக பாதையில் உள்ள மின்மாற்றிகள், புதைவட கம்பிகள் மற்றும் மின்சார கம்பிகளில் அவ்வப்போது ஏற்படும் பழுதுகள் காரணமாக சில இடங்களில் மின்சார தடை ஏற்படுகிறது.

இத்தகைய மின்சார தடைகள் ஏற்படும்போது, உடனுக்குடன் சரி செய்யப்பட்டு தடையில்லா, சீரான மின்சாரம் வழங்க அறிவுறுத்தப்பட்டது.

மின்சார தடை குறித்த குறுந்தகவல்

பராமரிப்பு பணிகளுக்காக திட்டமிடப்பட்ட மின்சார நிறுத்தங்களின்போது, மின்சாரம் தடைபடும் நேரம் குறித்து மின்சார நுகர்வோர்களுக்கு முன்னரே குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவிக்கப்படுவதை உறுதி செய்ய அனைத்து மின்சார பகிர்மான வட்ட மேற்பார்வைப் என்ஜினீயர்களுக்கு வாரியம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

பொதுமக்கள் மின்சார தடை தொடர்பான புகார்களை தெரியப்படுத்த மின்னகம் (94987-94987), மின் நுகர்வோர் சேவை மையம் இயங்கி வருகிறது. மின்னகத்தில், பொதுமக்களிடமிருந்து புகார்களை பெறுவதற்காக, 3 முறைப்பணிகளில், ஒவ்வொரு முறைப்பணிக்கும் 2 மேற்பார்வையாளர்கள் உட்பட 65 பணியாளர்களுடன் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது என்று அதிகாரிகள் கூறினர்.

இந்த ஆய்வு கூட்டத்தில் இயக்குனர்கள், மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments