புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்




பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

விடுதிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு பள்ளி விடுதிகள் 45 எண்ணிக்கையில் மாணவர்களுக்கும், 19 எண்ணிக்கையில் மாணவிகளுக்கும், கல்லூரி, ஐ.டி.ஐ. விடுதிகளில் 6 மாணவர்களுக்கும், 5 மாணவிகளுக்கும் இயங்கி வருகிறது. பள்ளி விடுதிகளில் 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயில்கின்ற மாணவ, மாணவிகளும் கல்லூரி, ஐ.டி.ஐ. விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ. படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விடுதிகளில் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவ, மாணவிகளும், குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும், உணவும் தங்கும் வசதியும் அளிக்கப்படுகிறது.

விண்ணப்பங்கள்

10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கப்படும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். விடுதிகளில் சேருவதற்கு பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்குக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும்.

இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ- மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், பள்ளி விடுதிகளை பொறுத்த வரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 14-ந் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்த வரை வருகிற 1-ந் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.

சான்றிதழ்கள்

மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்கலாம் அல்லது விடுதியில் சேரும் போதும் இச்சான்றிதழ்களை அளிக்கலாம். ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு விடுதியிலும், மீட்கப்படும் குழந்தை தொழிலாளர்களை எக்காலத்திலும், எந்த நேரத்திலும், எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக்கொள்ளப்படும், அவர்களது படிப்பு முடியும் வரை, விடுதிகளில் தங்கிப் பயிலவும் அனுமதிக்கப்படும். எனவே மாணவ, மாணவிகள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையுமாறு கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments