3,500 சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கு உடனடி அனுமதி அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது




தமிழகத்தில் 3,500 சதுர அடி வரை கட்டப்படும் கட்டிடங்களுக்கு சுயசான்றிதழ் முறையில் உடனடி அனுமதி வழங்கும் திட்டம், அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் அமலுக்கு வருகிறது.

புகார்கள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களின் ஒவ்வொரு பிரச்சினைகளையும் தீர்க்கும் வகையில் திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு வரும் மனுக்களின் அடிப்படையில் தனிமனித பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு, அதற்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் பட்டா மாறுதல் மற்றும் வீடு கட்டுவதற்கான அனுமதி தொடர்பாக ஏராளமான புகார்கள் மற்றும் கோரிக்கைகள் அரசுக்கு வந்த வண்ணம் உள்ளன.

எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பத்திரம் பதிவு செய்தவுடன் அவர்களுக்கு ஒரு நிமிடத்தில் பட்டா வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக கட்டிட வரைப்பட அனுமதி பெறுவதில் உள்ள சிக்கல்களை ஒட்டுமொத்தமாக களைவதற்கான நடவடிக்கை எடுத்து விட்டார்.

அறிவிப்பு

தற்போது கட்டிட வரைபட அனுமதி பெறுவதற்கு அதிக அளவு லஞ்சம், காலதாமதம் என மக்கள் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். இவற்றிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அதாவது 2 ஆயிரத்து 500 சதுரடி வரை உள்ள இடங்களுக்கு அதிகபட்சமாக 3,500 சதுரடி வரையும், 7 மீட்டர் (23 அடி) உயரம் வரை கட்டப்படும் கட்டிடங்களுக்கு அவர்கள் வழங்கும் சுய சான்றிதழ் அடிப்படையில் உடனடியாக அனுமதி வழங்கப்படும் என்று கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.

பின்னர் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக, இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டது. தற்போது இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்-அமைச்சரின் நேரடி கண்காணிப்பில் செயல்படுத்தப்படும் திட்டம் என்பதால், அதிகாரிகள் கூடுதல் கவனம் எடுத்து வருகின்றனர். அதற்கான ஆலோசனை கூட்டம், தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது.

சுயசான்றிதழ்

இந்த திட்டத்திற்கான விரிவான விதிமுறைகள் அடங்கிய அரசாணை அதிகபட்சமாக இன்னும் 10 நாட்களுக்குள் வெளியிடப்படுகிறது. அதன்பின் இந்த திட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்து விட்டால், பொதுமக்கள் வீடு கட்டுவதற்கான மனையின் விவரங்கள், உரிமை ஆவணங்கள், சாலையின் அகலங்கள், கட்டிட பரப்பளவு, உயரம் போன்ற விவரங்களுடன் சுய சான்றிதழ் இணைத்து அதற்கான இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

பின்னர் பொதுமக்கள் செலுத்த வேண்டிய கட்டணங்களை மென்பொருள் கணக்கிட்டு தெரிவிக்கும். அந்த கட்டணத்தை செலுத்தியவுடன், ‘கியூ ஆர் கோடு’டன், கட்டிட அனுமதி மற்றும் வரைபடங்களை உடனடியாக பதிவிறக்கம் செய்யலாம். அதேபோல் வீடு கட்டும் இடம், மனை அங்கீகாரம் பெற்று இருக்க வேண்டும். சுய சான்றிதழ் முறையில் அனுமதி வழங்கினாலும், கட்டிட விதிமுறைகள் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளில் எந்த மாற்றம் இல்லை.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments