புதுக்கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்: கலெக்டர் அருணா தேசியக்கொடி ஏற்றினார்




புதுக்கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலெக்டர் அருணா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

சுதந்திர தின விழா

நாடு முழுவதும் சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டையில் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.

விழாவில் காலை 9.05 மணி அளவில் தேசிய கொடியை கலெக்டர் அருணா ஏற்றி வைத்து மாியாதை செலுத்தினார். தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். மேலும் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளை நிற புறாக்களையும், தேசிய கொடியின் மூவர்ண நிறத்திலான பலூன்களையும் அவர் பறக்கவிட்டார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து தியாகிகள் மற்றும் அவரது வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது.

நலத்திட்ட உதவிகள்

விழாவில் போலீசார் உள்பட அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 277 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் அருணா வழங்கினார். இதேபோல சமீபத்தில் வலையில் சிக்கிய கடல் பசுவை கடலில் பத்திரமாக விட்ட மீனவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் 92 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சத்து 21 ஆயிரத்து 244 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு இசைப்பள்ளி, எஸ்.எப்.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளி, குரும்பக்காடு லாரல் மேல்நிலைப்பள்ளி, இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி, ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ராஜாளிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் சார்பில், 957 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

வயநாடு சம்பவம்

கலை நிகழ்ச்சியில் தமிழ் பற்று, தேசிய ஒருமைப்பாடு, எனது இந்தியா, மனித நேயம், பாரதமே முன்னேறு, பெண் புரட்சி, ஒன்றுபட்ட பாரதம், பழங்காலம் முதல் நவீன கால கல்வி வளர்ச்சி ஆகிய பல்வேறு மையக் கருத்துகளை உள்ளடக்கி நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகளின் நடனம் உள்பட கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தது. பழங்காலம் முதல் தற்காலம் வரையிலானதில் மாணவ-மாணவிகள் பழங்கால மனிதர்கள் போன்று வேடமிட்டு அசத்தினர்.

இதேபோல மனிதநேயம் தலைப்பில் சமீபத்தில் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவையும், அதில் மீட்பு பணி நடைபெற்றதையும், காட்டில் சிறுமி, பாட்டி ஆகியோரை யானைகள் காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவத்தையும் விளக்கும் வகையில் மாணவ-மாணவிகள் தத்ரூபமாக நடனமாடி மெய்சிலிர்க்க வைத்தனர். இதேபோல ராணுவத்தினரின் பணியை போற்றும் வகையிலும் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி கைத்தட்டல்களை அள்ளியது.

பரிசுகள்

மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுக்கு மதிப்பிடப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் முதல் பரிசை ராஜாளிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியும், 2-வது பரிசை அறந்தாங்கி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியும், 3-வது பரிசை லாரல் மேல்நிலைப்பள்ளியும் பெற்றது. முதல் 3 பரிசுகளையும், மற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஆறுதல் பரிசுகளையும் கலெக்டர் அருணா வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ரம்யாதேவி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், வருவாய் கோட்டாட்சியர்கள் ஐஸ்வர்யா (புதுக்கோட்டை), சிவக்குமார் (அறந்தாங்கி), தெய்வநாயகி (இலுப்பூர்) உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அரசு பள்ளி

இதேேபால் கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஜபருல்லா தேசிய கொடியேற்றினார். போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ரவி தேசிய கொடியேற்றி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். கறம்பக்குடி நூலகத்தில் வாசகர் வட்ட தலைவர் ரோஸ்னி அப்துல்லா கொடியேற்றினார்.

ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சுதந்திர தின விழாவில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பாலமுருகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதில் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments