தமிழக அரசின் நலவாரியத்தில் உறுப்பினராக வெளிநாடு வாழ் தமிழர்கள் ஆர்வமாக விண்ணப்பிப்பு புதுக்கோட்டையில் இதுவரை 600 பேர் பதிவு




வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான நல வாரியத்தில் உறுப்பினராக அதிகம் பேர் விண்ணப்பித்து வருகின்றனர். புதுக்கோட்டையில் இதுவரை 600 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

நலவாரியம்

வேலைவாய்ப்பு, கல்வி, வணிகம் போன்ற காரணங்களுக்காக தமிழர்கள் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்வது சமீபகாலங்களில் அதிகரித்து வருகிறது. இவ்வாறு புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வாழும் தமிழர்களின் நலன் காக்க `அயலகத் தமிழர் நல வாரியம்' தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அயலகத்தில் உள்ள தமிழர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

அதன்படி 18 முதல் 55 வயது வரை உள்ள வெளிநாடு வாழ் தமிழர்கள், அயலகத் தமிழர் நலத்துறையின் https://nrtamils.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு கட்டணமாக ரூ.200 செலுத்தி, வெளிநாட்டு அயலகத் தமிழர் மற்றும் வெளிமாநில அயலகத் தமிழர் ஆகிய பிரிவுகளின் கீழ் வாரியத்தில் தங்களை உறுப்பினராக இணைத்து அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.

பதிவு கட்டணம்

உறுப்பினர் பதிவை ஊக்குவிக்கும் வகையில் கடந்த மே மாதம் 15-ந் தேதி முதல் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி வரை பதிவு கட்டணம் ரூ.200 செலுத்துவது விலக்களிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த விலக்கு முடிவடைந்த நிலையில் தற்போது ரூ.200 செலுத்தி உறுப்பினராகலாம்.

இத்திட்டத்தில் அயலகத் தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள நபர் ரூ.5 லட்சம் மற்றும் ரூ.10 லட்சத்துக்கான காப்பீட்டு தொகை சந்தாக்களில் விருப்பமான ஒன்றை தேர்வு செய்து பயனடையலாம். இதுதவிர தீவிர மற்றும் தொடர் சிகிச்சைக்கு தேவைப்படும் நோய்களுக்கான காப்பீடு தொகைக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை உள்ள சந்தாக்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

ஓய்வூதியம்

வெளிநாட்டில் தமிழர் இறக்கும் நிலையில், அவரது குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி நிலைக்கேற்ப கல்வி உதவித்தொகையும், திருமண உதவித்தொகை திட்டத்தின் கீழ் அவரது குடும்பத்திலுள்ள திருமண வயது பூர்த்தியடைந்த மகன் மற்றும் மகளுக்கு திருமண உதவித்தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். மேலும் ஓய்வூதியமும் வழங்கப்பட உள்ளது.

இந்த அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறையின் மூலம் செயல்படுத்தப்படும் நலவாரியத்தில் உறுப்பினராக சேர வெளிநாடு வாழ் தமிழர்கள் அதிகம் பேர் விண்ணப்பித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பலர் மருத்துவ படிப்பு, வேலைவாய்ப்பு, தொழில் நிமித்தமாக மலேசியா, சிங்கப்பூர், துபாய், குவைத், ரஷியா, அமெரிக்கா, வளைகுடா நாடுகள் உள்பட வெளிநாடுகளுக்கு அதிகம் புலம் பெயர்ந்துள்ளனர்.

600 பேர் விண்ணப்பம்

இந்த நிலையில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான நலவாரியத்தில் உறுப்பினராக ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மே மாதம் முதல் தற்போது வரை 600 பேர் வரை விண்ணப்பித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு இத்திட்டத்தில் முன் பயண புத்தாக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் வெளிநாட்டிற்கு செல்வதற்கு முன்பு என்னென்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விசா, வேலை ஒப்பந்தம் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் வெளிநாடு வாழ் தமிழர்களிடம் இத்திட்டத்தில் உறுப்பினராக சேர விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

காப்பீட்டு தொகை

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ``வெளிநாட்டில் வேலைக்கு செல்லும் இடத்தில் ஏதேனும் விபத்து நேரிட்டால் இத்திட்டத்தில் காப்பீடு தொகை உதவியாக இருக்கும். மேலும் அவர்களது குடும்பத்தினரின் குழந்தைகளுக்கு உதவித்தொகை பெற முடியும். நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்த பின் காப்பீட்டு திட்டத்தில் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கான தொகையை செலுத்த வேண்டும். இத்திட்டத்தை பயன்படுத்தி கொள்ளும் வகையில் வெளிநாட்டிற்கு சென்றவர்களும், அங்கிருந்து இணையதளம் மூலமும் விண்ணப்பித்து வருகின்றனர்'' என்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments