பட்டியலில் இருந்து வாக்காளர் பெயரை நீக்க புதிய நடைமுறை தலைமை தேர்தல் அதிகாரி தகவல்




வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர் பெயரை நீக்க புதிய நடைமுறை பின்பற்றப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக மாநிலத்தின் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை கேட்டு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு, ஆணையம் கடிதம் அனுப்பியது. இதுபற்றி கேட்டபோது தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:-உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலை கேட்டு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரியால் வழங்க முடியாது. இந்திய தேர்தல் கமிஷனுக்குதான் அதற்கான அதிகாரம் உள்ளது.எனவே மாநில தேர்தல் ஆணையத்தின் கடிதம், இந்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டது. அதற்கு சாதகமான பதிலை தற்போது தேர்தல் கமிஷன் எங்களுக்கு அனுப்பி உள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு குறுகிய காலமே உள்ளதால் வாக்காளர் பட்டியலை வழங்குவதற்கான தனி வழிகாட்டுதல்களை தேர்தல் கமிஷன் அனுப்பி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பெயரை நீக்க...

மேலும் அவர் கூறியதாவது:-வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கும்போது அதற்கான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று எங்களுக்கு தி.மு.க. கடிதம் எழுதி உள்ளது. தன்னிச்சையாக வாக்காளர் பட்டியலி்ல் இருந்து பெயர்களை நீக்க முடியாது. அதற்காக இந்திய தேர்தல் கமிஷன் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.வீடுகளில் வாக்காளர்கள் இல்லாத நிலை, முகவரி மாற்றம், இறப்பு ஆகிய காரணங்களுக்காக பெயர் நீக்கம் செய்யப்படுகிறது.வீடுகளில் வாக்காளர் தங்கவில்லை என்றாலும், முகவரி மாற்றம் என்றாலும் பல கள ஆய்வுகளுக்கு பின்னரே உறுதி செய்யப்படும்.

வாக்காளருக்கு கடிதம்

வாக்காளர் இறந்துவிட்டால் உறவினர்களிடம் இருந்து இறப்புச் சான்றிதழ் பெறப்படும்.ஒருவர் பெயர் இரண்டு இடங்களில் இருந்தால், ஒரு இடத்தில் பெயரை நீக்க, சம்பந்தப்பட்ட வாக்காளருக்கு கடிதம் அனுப்பப்படும்.அதைத்தொடர்ந்து 2 வார காலத்திற்கு பின்னர், மீண்டும் கள ஆய்வு செய்யப்படும். அப்படி உறுதி செய்த பிறகுதான் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படு்ம்.

தற்போது தி.மு.க.வின் கடிதத்துடன் தேர்தல் கமிஷனின் விதிமுறைகளை இணைத்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பியுள்ளோம். அதைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments