பக்தர்கள் புனித நீராட வசதி: கட்டுமாவடி கடற்கரை பகுதி சுற்றுலா தலமாக்கப்படுமா?




பக்தர்கள் புனித நீராட வசதியுடன் படகு குழாம் அமைத்து கட்டுமாவடி கடற்கரை பகுதி சுற்றுலா தலமாக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கடற்கரை பகுதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் மணமேல்குடி, கட்டுமாவடி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல் உள்பட அதன் சுற்றுவட்டாரத்தில் 32 கிலோ மீட்டர் தூரம் கடற்கரை பகுதியாகும். கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் மீன்பிடி இறங்கு தளம் அமைந்துள்ளது. மணமேல்குடி, கட்டுமாவடி உள்ளிட்ட இடங்களில் நாட்டு படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

பாக்ஜலசந்தி கடற்கரை பகுதியில் அமைந்துள்ளதால் இங்கிருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக செல்ல குறைந்த நேரமாகும். மேலும் கடலும் அமைதியாகவே காணப்படும். ஆர்ப்பரிக்கும் அலைகள் இருக்காது. மாவட்டத்தில் கடற்கரை பகுதியில் கோடியக்கரையில் கண்காணிப்பு கோபுர வசதியுடன் சுற்றுலா தலம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்பின் கண்காணிப்பு கோபுரம் பயன்பாட்டிற்கு வரவில்லை.

புனித நீராடல்

கோடியக்கரை கடற்கரை பகுதியில் தை, ஆடி, புரட்டாசி மாத அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க பக்தர்கள் வருவது உண்டு. கடலில் புனித நீராடி செல்வார்கள். இதேபோல் கட்டுமாவடி பகுதியிலும் திதி கொடுக்க பக்தர்கள் அதிகம் வருவது உண்டு. கடலில் புனித நீராடி அருகே உள்ள ராமர் கோவிலில் வழிபாடு நடத்துவார்கள். பொதுவாக முன்னோர்களுக்கு திதி கொடுப்பதில் புனித தலமாக ராமேசுவரத்திற்கு அதிகம் செல்வார்கள்.

ராமேசுவரத்தில் உள்ள கோவிலை போல் கட்டுமாவடியில் கடற்கரை பகுதியில் இந்த கோவில் அமைந்துள்ளதால் பொதுமக்கள் பலர் கட்டுமாவடி கடற்கரைக்கு வருவது உண்டு. அவ்வாறு வந்து செல்வதில் தங்களது பழைய ஆடைகளை அங்கேயே விட்டு செல்வதால் குவிந்து கிடப்பது வழக்கம்.

சுற்றுலா தலம்

இந்த நிலையில் கட்டுமாவடி கடற்கரை பகுதியை சுற்றுலா தலமாக மாற்றினால் பொதுமக்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். இங்குள்ள கடற்கரை பகுதியில் நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்க சென்று வருவதில் படகுகள் கடற்கரையில் மணல் பகுதியில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதில் படகு சவாரி போல் படகுகுழாம் அமைத்தால் பொதுமக்கள் கடலில் சிறிது தூரம் சென்று அழகை ரசித்து பார்த்து வர முடியும்.

இதேபோல் அமாவாசை தினங்களில் திதி கொடுக்க பக்தர்கள் புனித நீராட வசதியும், உடைகளை மாற்ற அறைகள், கழிவறை, தங்கும் வசதி அறை ஏற்படுத்தி கொடுத்தால் பொதுமக்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் சாலை வசதி, வாகன நிறுத்துமிடம் உள்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments