மழை, வெள்ளத்தை முன்கூட்டியே அறிய ‘தமிழகம் அலர்ட்’ செயலி ஆபத்து காலத்தில் உதவிக்கும் அழைக்கலாம்




மழை, வெள்ளத்தை முன்கூட்டியே அறிய ‘தமிழகம் அலர்ட்' செயலியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. அதில் ஆபத்து காலத்தில் உதவிக்கு அழைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

முன்னேற்பாடுகள்

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை கொட்டி தீர்த்து விடுகிறது. கடந்த ஆண்டு கூட சென்னை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் மழையால் அதிகளவில் பாதிக்கப்பட்டன. அதிக மழை பெய்யும்போது குடியிருப்புகளை மழை நீர் வெள்ளம்போல் தேங்கி, மக்கள் வெளியேற முடியாமல் முடக்கி போட்டு விடுகிறது.

மின்சார துண்டிப்பு, குடிநீர் தட்டுப்பாடு, உணவு பிரச்சினை என மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைகிறது.இதற்கிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டுகளைபோல் பாதிப்பு இல்லாமல் மழை வெள்ளத்தில் இருந்து மக்களை முழுமையாக காக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார். அதன்படி அதிகாரிகள், அதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றனர். வாய்க்கால் தூர்வாரும் பணிகள், வெள்ளப்பாதிப்பு ஏற்படும் இடங்களை கண்டறிவது, நிவாரண முகாம்கள் அமைக்கும் இடங்கள் ஆகியவை குறித்து இப்போதே ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

மின்னல்-மழைப்பொழிவு

அதேவேளையில் மழை வெள்ளத்தை முன்கூட்டியே பொதுமக்களும் எளிதாக தெரிந்து கொண்டு முன்னேற்பாடுகளை செய்யும் வகையில் தமிழக அரசு “தமிழகம் அலர்ட்" (TN-ALERT) என்ற செயலி-யை வடிவமைத்து உள்ளது. இதனை ‘கூகுள் பிளே ஸ்டோரில்’ இருந்து பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இந்த செயலியில் நாம் இருக்கும் இடத்தில் வானிலை, மின்னல், மழைப்பொழிவு ஆகிய விவரங்களை முழுமையாக தெரிந்து கொள்ளலாம். தேவைப்பட்டால் தமிழகம் முழுவதும் எந்த பகுதியில் மழை-வெள்ளம் இருக்கும் என்பதனையும் பார்த்து கொள்ளலாம். மேலும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து விட்டாலே, உங்களுக்கு இது தொடர்பான அறிவிப்புகள் வந்த வண்ணம் இருக்கும்.அதேபோல் நீர்தேக்கங்களின் நீர்மட்டம், அபாய எச்சரிக்கை ஆகியவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.

உதாரணமாக சென்னை வாழ் மக்கள் பூண்டி, செங்குன்றம், சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஆகிய நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் அளவு மற்றும் தற்போதைய நீர் அளவு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். அதேபோல் அந்தந்த மாவட்ட மக்கள் தங்கள் பகுதியில் உள்ள நீர்த்தேக்கங்களின் இருப்பு விவரங்களை பார்க்கலாம்.

மீட்பு பணிகள்

மேலும் மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன. இந்த இடங்களுக்கு செல்வதை மக்கள் முற்றிலும் தவிர்த்து விடலாம். அல்லது அங்கிருப்பவர்கள் உடனே வெளியேறலாம். இவற்றை எல்லாம் விட முக்கியமாக மழை-வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்பில் சிக்கி கொண்டால் அது குறித்த தகவல்களை உடனே அரசுக்கு தெரிவிக்கலாம். அதனால் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்படுவார்கள்.

அதேபோல் பாதிப்பு காலங்களில் மக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் மாவட்ட வாரியாக கொடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலி-யை பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி தமிழக அரசு கேட்டு கொண்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments