பொதுத் தேர்வு அட்டவணை 2025: 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களே நோட் பண்ணிக்கோங்க!






எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மார்ச் 28-ந் தேதியும், பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 3-ந் தேதியும், பிளஸ்-1 தேர்வு மார்ச் 5-ந் தேதியும் தொடங்குகிறது. இந்த அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோவையில் வெளியிட்டார்.

பொதுத்தேர்வு அட்டவணை

2024-25-ம் கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிடும் நிகழ்ச்சி கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று வெளியிட்டார். அப்போது அவர், கூறியதாவது:-

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு (2025) மார்ச் 28-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 15-ந் தேதி முடிவடைகிறது. பிளஸ்-1 வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 5-ந் தேதி தொடங்கி மார்ச் 27-ந் தேதி முடிவடைகிறது.

பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 3-ந் தேதி தொடங்கி மார்ச் 25-ந் தேதி முடிவடைகிறது.

செய்முறை தேர்வு

எஸ்.எஸ்.எல்.சி. செய்முறைத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 22-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 28-ந் தேதி முடிவடைகிறது. இதுபோன்று பிளஸ்-1 வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 15-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி முடிவடைகிறது.

பிளஸ்-2 வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 7-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 14-ந் தேதி முடிவடைகிறது.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வை தமிழகம் முழுவதும் 25 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். எந்தவித பதற்றமும் இன்றி தேர்வு எழுத வேண்டும். சரியாக திட்டமிட்டு தேர்வை எழுதுங்கள். பள்ளிக்கல்வி திட்டங்கள் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் 20 திட்டங்களில் 18-ல் தமிழகம் முதன்மையாக உள்ளது. மற்ற மாநிலங்களும் தமிழக பள்ளிக்கல்வித்துறையை பின்பற்றி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

நிதியை நிறுத்த கூடாது

மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதியை தருவோம் என்கின்றனர். இது நியாயம் இல்லை. மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்த கூடாது. அதை முழுமையாக கொடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள பள்ளிக ளில் மரத்தின் அடியில் வகுப்புகள் நடத்தக் கூடாது. சிதிலம் அடைந்த கட்டிடங்களில் வகுப்புகள்நடத்தக்கூடாது என்பது தான் எங்களது நோக்கம். அதற்கு ஏற்ப பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் ரூ.7,500 கோடி ஒதுக்கப் பட்டு பள்ளிகள் சீரமைப்பு, புதிய வகுப்பறைகள் கட்டுவது, ஆய்வகம் உள்பட 3,500 பணிகள் நடந்துள்ளது. நடப்பாண்டில் இந்த திட்டத்தின் கீழ் மேலும் ரூ.1500 கோடி ஒதுக்கப்பட்டு, மேலும் 3 ஆயிரம் பணிகள் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments