தேசிய கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் நாளை கடைசி நாள்




தேசிய கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.

கல்வி உதவித்தொகை

இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட உள்ளது.

2024-25-ம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 லட்சம். இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் நாளை (புதன்கிழமை) ஆகும். கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க கடைசி நாள் வருகிற 31-ந் தேதி ஆகும்.

புதுப்பித்தல்

இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பதிவு செய்து 2024-25-ம் ஆண்டிற்கான விண்ணப்பத்தினை புதுப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள், முறையே 8 மற்றும் 10-ம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித்தொகையானது வழங்கப்படும். எனவே, 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் தங்களது செல்போன் எண் மற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்தால் ஓ.டி.ஆர். எண், ரகசிய குறியீடு எண் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரப்பெறும்.

இணையதள முகவரி

மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட https://scholarships.gov.in மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை http://socialjustice.gov.in அணுகி கல்வி உதவித்தொகை பயன்களை பெறுமாறு கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments