காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைகிறது: தமிழ்நாட்டில் நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்




காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைகிறது என்றும், இதன் காரணமாக தமிழ்நாட்டில் டெல்டா, வடமாவட்டங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் வலுவடைகிறது

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வருகிறது. இது இன்று (திங்கட்கிழமை) மேலும் வலுவடைந்து, நன்கமைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறக் கூடும்.

தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழகம் கடலோரப் பகுதிகளையொட்டி நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, நாளை முதல் வருகிற 13-ந் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் சில இடங்களில் கனமழைக்கும், ஓரிரு இடங்களில் மிக கனமழை வரைக்கும் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

மிக கனமழைக்கு வாய்ப்பு

அதன்படி, நாளை கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்யக்கூடும்.நாளை மறுநாள் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

தென் மாவட்டங்களுக்கு மழை

12-ந் தேதி தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்காலிலும் கனமழையும் பெய்யக்கூடும்.

13-ந் தேதி தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

இந்த நிகழ்வைத் தொடர்ந்து அடுத்த ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி 17-ந் தேதி அல்லது 18-ந் தேதி வங்கக்கடலில் உருவாகிறது. இது தாழ்வு மண்டலமாகவும், சாதாரண புயலாகவும் வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments