தொடர் மழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 76 வீடுகள் சேதம் மேலும் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின




புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மேலும் 76 வீடுகள் சேதம் அடைந்தன. மணமேல்குடி மஞ்சள்குளம் தற்போது முழு கொள்ளளவை எட்டியது.

தொடர் மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையால் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாநகரில் நேற்று காலை முதல் விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக நாகுடியில் 90.20 மி.மீட்டரும், ஆயிங்குடியில் 73.40 மி.மீ., அறந்தாங்கியில் 58.80 மி.மீ., ஆவுடையார்கோவிலில் 56.80 மி.மீட்டரும் மழை பதிவானது.மணமேல்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக மணமேல்குடி, அம்மாபட்டினம், வடக்கு அம்மாபட்டினம் மற்றும் கடற்கரை பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதேபோல் மணமேல்குடி அண்ணா நகர், குலச்சிறையார் நகர், காந்திநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை சுற்றிலும், வீட்டின் உள்ளேயும் மழைநீர் புகுந்துள்ளது.

வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு

அண்ணா நகர் பகுதியில் மழைநீர் புகுந்துள்ளதால் விஷ பூச்சிகள் வீட்டின் உள்ளே வருகிறது. இதனால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை மணமேல்குடி ஊராட்சி சார்பாக 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வடக்கு மணமேல்குடி பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் இறால் பண்ணைகள் மழைநீர் செல்லும் வழியை தடுத்ததாக கூறி அதிகாரிகள் அந்த இறால் பண்ணைகளை அகற்றினார்கள். மேலும் மணமேல்குடியின் முக்கிய குளமாக கருதப்படும் மஞ்சள்குளம் பல ஆண்டுகள் கழித்து தற்போது முழு கொள்ளளவை எட்டி தண்ணீர் நிரம்பி வழிகிறது. மேலும் மணமேல்குடி சுற்றியுள்ள கிராமங்களில் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கண்மாய்கள், குளங்கள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுவதால் மணமேல்குடி தெற்கு வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

76 வீடுகள் சேதம்

கடலோரப்பகுதியில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருவதால் மணமேல்குடி கடைவீதியில் பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். மேலும் அப்பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதால் ஓட்டல்கள் செயல்படவில்லை. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மணமேல்குடி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக மேலும் 76 வீடுகள் சேதமடைந்தன. 2 மாடுகள், 12 ஆடுகள் என 14 கால்நடைகள் செத்தன. புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையிலும் ஒரு சில இடங்களில் வீடுகள் சேதமடைந்தன.

தொடர் மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவ மழையை நம்பி விவசாயம் நடைபெறுகிறது. மாவட்டத்தில் தற்போது நடப்பு ஆண்டில் சம்பா சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் சுமார் 2 லட்சத்து 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழையை நம்பி விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்துள்ள நிலையில், மழையும் பரவலாக பெய்து வருகிறது.

இந்த நிலையில் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதில் கடற்கரை பகுதியான மணமேல்குடியில் பலத்த மழை பெய்தது. மேலும் ஆவுடையார்கோவில் சுற்றுவட்டாரத்திலும் கன மழை பெய்தது.

நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின

இந்த தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் ஆங்காங்கே நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. மாவட்டத்தில் மணமேல்குடி, ஆவுடையார்கோவில் பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘சம்பா நெற்பயிர் நடவு செய்யப்பட்டதில் 60 முதல் 70 நாட்கள் ஆகியுள்ளன. தொடர் மழையின் காரணமாக வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் ஆவுடையார்கோவில், மணமேல்குடி சுற்றுவட்டார பகுதிகளில் வயல்களில் தண்ணீரில் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. இதில் தண்ணீர் வடிந்து விட்டால் பயிர்களுக்கு சேதம் ஏற்பட வாய்ப்பு இல்லை. தண்ணீர் வடியாவிட்டால் பயிர்கள் சேதம் ஆக வாய்ப்பு உள்ளது.

அந்தந்த பகுதிகளில் வயல்களில் நெற்பயிர்கள் மூழ்கியிருப்பதை கணக்கெடுக்க வேளாண்மை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் உதவியுடன் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்'' என்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments