மணமேல்குடி அருகே வலையில் பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது: மீனவரை கழுத்தை நெரித்துக்கொன்று உடலை கடலில் வீசிய கொடூரம் சிறுவன் உள்பட 2 பேர் கைது




மணமேல்குடி அருகே வலையில் பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது. மீனவரை கழுத்தை நெரித்துக் கொன்று உடலை கடலில் வீசிய சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வலையில் சிக்கிய பிணம்

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே ஆதிப்பட்டினத்தில் கடலில் மீனவர் விரித்திருந்த வலையில் கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலில் கல்லை கயிற்றால் கட்டி வீசப்பட்டிருந்தது. அவர் கொலை செய்யப்பட்டது உறுதியான நிலையில் இதுதொடர்பாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் முதலில் விசாரணை நடத்தினர்.

பின்னர் மணமேல்குடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். வலையில் பிணமாக கிடந்தவரை அடையாளம் காண மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக்குப்தா உத்தரவின் பேரில் மணமேல்குடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.

அடையாளம் தெரிந்தது

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்ததில் பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது. இதில் அவர் மணமேல்குடி அருகே வடக்கு புதுக்குடி கிராமத்தை சேர்ந்த மாதவன் (வயது 40) என்பது உறுதியானது. மாதவனுக்கு காளீஸ்வரி என்ற மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருப்பதும் தெரிந்தது.

கொலையான மாதவன் அணிந்திருந்த சட்டையில் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த தையல் கடையின் முகவரி மற்றும் அவர் கையில் குத்தியிருந்த பச்சையின் பெயர்கள் ஆகியவற்றை மாதவனின் மனைவி காளீஸ்வரியிடம் காண்பித்து போலீசார் உறுதி செய்தனர். மேலும் போலீஸ் புலன்விசாரணையில் மாதவனை அதே ஊரை சேர்ந்த காளீஸ்வரன் (24) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 2 பேர் சேர்ந்து கொலை செய்து கல்லை கட்டி உடலை கடலில் வீசியது தெரியவந்தது.

2 பேர் கைது

இதையடுத்து சிறுவன் உள்பட 2 பேரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காளீஸ்வரனை புதுக்கோட்டை சிறையிலும், சிறுவனை திருச்சி சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியிலும் அடைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

மாதவன் கடலில் மீன்பிடிக்க அடிக்கடி வெளியில் சென்று 15 நாட்களுக்கு மேல் தான் வீடு திரும்புவது வழக்கமாம். இதனால் கணவர் வீட்டிற்கு வராமல் இருந்ததை மனைவி காளீஸ்வரி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மாதவன் மது அருந்தும் பழக்கம் உடையவர். சம்பவத்தன்று கடற்கரை பகுதியில் மதுபோதையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த காளீஸ்வரன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரும் சேர்ந்து அவரிடம் முன்விரோதம் காரணமாக தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

கடலில் உடல் வீச்சு

இந்த தகராறில் கயிற்றால் மாதவனின் கழுத்தை நெரித்து அவர்கள் 2 பேரும் கொலை செய்துள்ளனர். மேலும் கல்லில் உடலை கயிற்றால் கட்டி, கடலில் வீசியுள்ளனர். அதன்பிறகு தலைமறைவாகினர். தொடர்புலன் விசாரணையில் மீனவ கிராமத்தில் காணாமல் போனவர்கள் பற்றி விசாரித்தபோது துப்பு கிடைத்தது.

மேலும் செல்போன் கோபுர சிக்னலில் பதிவான செல்போன் எண்களை வைத்து ஆய்வு செய்தது மற்றும் சில தகவல்கள் அடிப்படையிலும் கொலையாளிகள் பற்றியும் விவரம் கிடைத்தது. அதன்பேரில் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.இவ்வாறு போலீசார் கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments