அறந்தாங்கி அருகே சோகம்: மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் பலி உறவினர்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு




அறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் பலியானார். மேலும் நிவாரணம் கேட்டு உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மின்சாரம் பாய்ந்தது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தேவர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் மாணிக்கமுத்து- கவிதா. இவர்களுக்கு செல்வகண்ணன் (வயது 12), சர்வேஸ்வரன் என 2 மகன்கள் உள்ளனர். செல்வகண்ணன் சிலட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று விடுமுறை என்பதால் நண்பர்களுடன் அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்தார்.

நேற்று முன்தினம் பெய்த மழையில் அங்கிருந்த மின்கம்பத்தின் ஸ்டே கம்பியில் மின்சாரம் பாய்ந்திருந்தது. இதனையறியாது செல்வகண்ணன் அந்த கம்பியை பிடித்துள்ளார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் இவருடன் விளையாடிய அவரது நண்பர் செருப்பு அணிந்திருந்ததால் லேசான ஷாக் அடித்ததுடன் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மாணவன் பலி

இதையடுத்து செல்வகண்ணனை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சாலை மறியல்

அதனை ெதாடர்ந்து மாணவனின் உறவினர்கள், பொதுமக்கள் நிவாரணம் கேட்டு அறந்தாங்கி மருத்துவமனை எதிரில் அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் மற்றும் ஆவணத்தான்கோட்டை இணை மின் பொறியாளர் செல்ல கணபதி, பொறியாளர் ஷோபனா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments