புதுக்கோட்டை ஏ.ஆர். சிக்னலில் வேகத்தடையில் வெள்ளைக்கோடு போட்ட ஊர்க்காவல் படை பெண் சமூக ஆர்வலர்கள் பாராட்டு




புதுக்கோட்டை ஏ.ஆர். சிக்னலில் உள்ள வேகத்தடையில் வெள்ளைக்கோடு போட்ட ஊர்க்காவல் படை பெண்ணுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

வேகத்தடை

புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை பகுதிஅருகே உள்ள சாலையில் ஏ.ஆர். சிக்னல் உள்ளது. இந்த சிக்னலில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இங்கு வேகத்தடைகள் இருக்கிறது என்பதை வாகன ஓட்டிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் வெள்ளைக்கோடுகள் போடப்படாமல் இருந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது வேகத்தடையை கவனிக்காததால் தடுமாறி கீழே விழுந்ததில் பரிதாபமாக இறந்தார்.

வெள்ளைக்கோடு

இந்தநிலையில் புதுக்கோட்டை ஊர்க்காவல் படையில் பணிபுரியும் சரோஜா என்பவர் நேற்று நள்ளிரவில் வாகனங்கள் எதுவும் வராத நேரத்தில் அப்பகுதியில் உள்ள இரண்டு வேகத்தடைகளுக்கும் தனது சொந்த செலவில் பெயிண்ட் வாங்கி அவரே வெள்ளைக்கோடுகளை போட்டுள்ளார். இந்த பகுதி பழைய அரசு மருத்துவமனை, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், புதுக்கோட்டை நகர போக்குவரத்து போலீஸ் அலுவலகம், தீயணைப்பு நிலையம், நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களுக்கு செல்லும் முக்கிய பகுதியாக இருப்பதால் வாகனங்கள் அதிகமாக சென்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஊர்க்காவல் படையில் பணிபுரியும் பெண் ஒருவர் தாமாக முன்வந்து வேகத்தடையில் வெள்ளைக்கோடுகள் போட்டுள்ளார். இதற்கு வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments