விபத்தின் விளிம்பில் மும்பாலை: முறிந்து விழும் நிலையில் மின்மாற்றி கம்பங்கள்!



புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள மும்பாலை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அமைந்துள்ள மின்மாற்றி மற்றும் மின்கம்பங்கள் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுவதால், இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

​சிதலமடைந்த சிமெண்ட் கம்பங்கள்
​இப்பகுதியில் உள்ள மின்மாற்றியைத் தாங்கி நிற்கும் சிமெண்ட் மின்கம்பங்கள் சிதிலமடைந்து, உள்ளே இருக்கும் இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு மோசமான நிலையில் உள்ளன. எப்பொழுது வேண்டுமானாலும் இந்த மின்கம்பங்கள் முறிந்து விழலாம் என்ற ஆபத்தான சூழல் நிலவுகிறது.

​திறந்தவெளியில் உள்ள சுவிட்ச் பாக்ஸ்
​மேலும், மின்மாற்றியின் அருகில் வைக்கப்பட்டுள்ள மின்சார சுவிட்ச் பாக்ஸ் கதவுகள் உடைந்து, பாதுகாப்பற்ற முறையில் திறந்தே கிடக்கிறது. கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து மும்பாலை செல்லும் பிரதான சாலையில் இது அமைந்துள்ளதால், பொதுமக்களோ அல்லது கால்நடைகளோ எதிர்பாராதவிதமாக இதன் அருகில் சென்றால் மின் விபத்து ஏற்படும் அபாயம் மிக அதிகமாக உள்ளது.

​பொதுமக்கள் கோரிக்கை
​மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக, அசம்பாவிதங்கள் ஏதேனும் நடக்கும் முன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக (TANGEDCO) அதிகாரிகள் உடனடியாக தலையிட வேண்டும். இந்த சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பங்களை நட்டு, சுவிட்ச் பாக்ஸை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments