புதுக்கோட்டை அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து




புதுக்கோட்டை அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது.

கார் மீது மோதியது

புதுக்கோட்டையில் இருந்து ராமேசுவரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதில் செபஸ்தியார்புரம் ரோடு பகுதியில் சாலையில் பேரிகார்டு வைக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதியை கடக்கும் வாகனங்கள் மெதுவாக சென்று வந்தன. இந்த நிலையில் நேற்று அந்த வழியாக வந்த கனரக லாரி ஒன்று, எதிர்பாராதவிதமாக முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது பலமாக மோதியது.

இதில் லாரி மோதிய வேகத்தில், அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தனக்கு முன்னால் சென்ற மற்றொரு காரின் மீது மோதியது. இவ்வாறு அடுத்தடுத்து முன்னால் சென்று கொண்டிருந்த 3 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் அந்த 4 கார்களின் முன்பகுதியும், பின்பகுதியும் பலத்த சேதமடைந்தன.

போக்குவரத்து பாதிப்பு

இதில் கார்களுக்குள் இருந்த பயணிகள் அனைவரும் நல்வாய்ப்பாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக புதுக்கோட்டை - ராமேசுவரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடைேய சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நமணசமுத்திரம் போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments