இரத்தினக்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சார்பில் மாபெரும் இரத்ததான முகாம்: 30 யூனிட் இரத்தம் சேகரிப்பு!



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) புதுக்கோட்டை மாவட்டம், இரத்தினக்கோட்டை கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் இன்று (05.07.2026, ஞாயிற்றுக்கிழமை) இரத்தினக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இம்முகாமிற்கு TNTJ மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் சபிபுல்லா தலைமை வகித்தார். கிளை நிர்வாகிகள் யாசின், ஷேக் அலாவுதீன், அசாருதீன், சாதிக் மற்றும் சதாம் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்து முகாம் பணிகளை ஒருங்கிணைத்தனர்.

மனிதநேய அடிப்படையில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான ஆண்களும் பெண்களும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களது குருதியை கொடையாக வழங்க முன்வந்தனர். இதில், வந்திருந்த பொதுமக்களுக்கு உரிய மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, மருத்துவத் தகுதியின் அடிப்படையில் முதற்கட்டமாக 30 யூனிட் இரத்தம் சேகரிக்கப்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

இரத்ததானம் வழங்கிய கொடையாளர்கள் அனைவரையும் பாராட்டி, அறந்தாங்கி அரசு மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவர் டாக்டர் ஹேமலதா (DCH) அவர்கள் சான்றிதழ்களை வழங்கிக் கௌரவித்தார்.

நிகழ்ச்சியின் நிறைவாக, மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் சபிபுல்லாஹ் நன்றியுரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், *"ஒரு மனிதரை வாழவைத்தவர் உலக மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவர் போன்றவர்" என்ற திருக்குர்ஆனின் உன்னதமான போதனையின் அடிப்படையில், மனித உயிர்களைக் காக்கும் உன்னத நோக்கோடு இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், இம்முகாம் மிகச் சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு நல்கிய மருத்துவர் டாக்டர் ஹேமலதா, அவரது மருத்துவக் குழுவினர், இரத்தக் கொடையாளர்கள் மற்றும் முகாம் ஏற்பாடுகளைச் செய்த கிளை உறுப்பினர்கள் அனைவருக்கும் ஜமாஅத் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments