கிருஷ்ணாஜிபட்டினம் TNTJ கிளை சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்: 33 யூனிட் இரத்தம் சேகரிப்பு!



புதுக்கோட்டை மாவட்டம், கிருஷ்ணாஜிபட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கிளை சார்பாக 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 16) நடைபெற்றது.

கிருஷ்ணாஜிபட்டினம் தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்ற இம்முகாமிற்கு, TNTJ மாவட்ட துணைச் செயலாளர் சைபுல் கரீம் தலைமை தாங்கினார். அறந்தாங்கி அரசு மருத்துவமனை இரத்த வங்கி குழுவினருடன் இணைந்து இந்த முகாம் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் M.M.நைனா முகமது, செயலாளர் சல்மான்கான், பொருளாளர் ஹாசன் நூருதீன், துணைத் தலைவர் ஷாஜகான், துணைச் செயலாளர் ஹஜ் முகமது மற்றும் மாணவரணி பொறுப்பாளர் ஹாரூன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இம்முகாமில் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்ததானம் செய்ய முன்வந்தனர். இதில் மருத்துவத் தகுதி பரிசோதனைகளுக்குப் பிறகு, தகுதியுடைய கொடையாளர்களிடமிருந்து 33 யூனிட் இரத்தம் சேகரிக்கப்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனை இரத்த வங்கிக்கு வழங்கப்பட்டது.

இரத்ததானம் செய்த கொடையாளர்கள் அனைவருக்கும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை மருத்துவர் Dr. காளிமுத்து சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.

நிகழ்வின் நிறைவாக மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் சபியுல்லா நன்றி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "ஒரு மனிதனை வாழ வைத்தவர், உலக மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவரைப் போன்றவர்" என்ற திருக்குர்ஆனின் உயரிய போதனையை அடிப்படையாகக் கொண்டு சமுதாய நலன் கருதி இந்த இரத்ததான முகாம் கட்டமைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், இம்முகாம் சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த மருத்துவர் Dr. காளிமுத்து தலைமையிலான மருத்துவக் குழுவினருக்கும், இரத்தக் கொடையாளர்களுக்கும், முகாம் ஏற்பாடுகளை முன்னெடுத்த கிளை நிர்வாகிகள், மாணவரணி, தொண்டரணி உறுப்பினர்களுக்கும் அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments