புகை நமக்குப் பகை




மே31 சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினமாகும். அதனை முன்னிட்டு புகைத்தல் பற்றிய இஸ்லாமியப் பார்வையை ஷெய்க் அகார் முஹம்மத் இங்கு விளக்குகின்றார். 
இன்று பாவனையில் இருக்கும் சிகரெட், சுருட்டு, பீடி போன்றவை ஆரம்ப காலத்தில் பரவலாக இல்லாமல் இருந்த காரணத்தினாலும் இவற்றுக்கும் பயன்படுத்தப்படும் புகையிலை முதலானவற்றினால் விளையும் சுகாதாரக் கேடுகள் பற்றி அன்று அறியப்படாமல் இருந்த காரணத்தினாலும் புகைத்தல்
 பற்றி தெளிவான மார்க்கத் தீர்ப்பை ஆரம்பகால இமாம்கள் வழங்கவில்லை. அண்மைக் காலம் வரை புகையிலையின் தன்மை, புகைத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றிய அறிவுபூர்வமான, விஞ்ஞான ரீதியிலான தெளிவான முடிவுகள் பெறப்படாததனால் புகைபிடித்தல் பற்றிய தீர்ப்பிலும் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவி இருக்கின்றன. சிலர் புகைத்தல் மக்ரூஹ் என்றார்கள். வேறு சிலர் முபாஹ்(பிழையானதல்ல) அது ஆகுமானது என்றார்கள். மற்றும் சிலர் ஹராம் என்று தீர்ப்பு வழங்கினார்கள். தற்காலத்தில் பெரும்பாலான ஆலிம்கள் புகைத்தலை ஹராம் என்றே கருதுகிறார்கள். புகைத்தல் ஹராமனது என்பதற்கு நியாயமான பல காரணங்களைக் காணமுடிகிறது. அவற்றைச் சுருக்கமாக கீழே நோக்குவோம்.

1.    போதையை எற்படுத்துதல்:
புகைத்தல் போதையை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக ஆரம்பபழக்கமுடையோருக்குச் சிறிது கூடுதலாகவே போதை ஏற்படுகிறது. ஏனைய போதைவஸ்துக்களைப் பாவிப்பதன் மூலம் ஏற்படுகின்ற அளவுக்குப் போதை ஏற்படாத போதும், மிகக் குறைந்த அளவிலாவது புகைப்பவர்கள் போதை கொள்கிறார்கள். 'குறைந்தளவு போதையை ஏற்படுத்தக் கூடியதும் ஹராமானது' என்பது நபிமொழி.

2.    சோர்வை ஏற்படுத்தல்:
புகைப்பதனால் போதை ஏற்படுவது இல்லை என்று வாதிப்போரும் புகைத்தல் சோர்வை ஏற்படுத்துகிறது என்பதை மறுப்பதில்லை. நபியவர்கள் உடல் உறுப்புக்களில் ;சோர்வை ஏற்படுத்தக் கூடியவற்றையும் தடுத்துள்ளார்கள். இது பற்றிய ஹதீஸ் முஸ்னத் அஹமத், அபூதாவூத் முதலான கிரந்தங்களில் பதிவாகியுள்ளது. இவற்றுடன் புகைப்பதனால் மூன்று வகையான தீமைகள் விளைகின்றன.

(i)    உடல் நலனுக்கு ஏற்படும் கேடு:
புகைப்பதனால் உடல்நலனுக்கு ஏற்படும் பயங்கரமான பாதிப்புக்களை பற்றியும் சுகாதாரக் கேடுகளைப் பற்றியும் நவீன மருத்துவம் மிக விரிவாகப் பேசுகிறது. ஒரு காலத்தில் புகைத்தலால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி உறுதியான, முடிவான, அறிவியல் ரீதியான ஆய்வுகள், முடிவுகள் இருக்கவில்லை என்பதனால் இது பற்றிய நிலைப்பாடுகளும் வேறுபட்டன. ஆனால் இன்று இதன் கேடுகள் குறித்து எத்தகைய சந்தேகத்தையும் ஏற்படுத்த முடியாத அளவுக்கு இது பற்றிய ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
வருடாந்தம் புகைத்தல் தொடர்பான நோய்களினால் 2.5 மில்லியன் மக்கள் வயதாவதற்கு முன்னதாகவே இறப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவிக்கிறார்.  அதாவது ஒவ்வொரு 13 வினாடிகளுக்கும் ஒரு மரணம் இதன் மூலம் சம்பவிக்கின்றது. மற்றுமோர் ஆய்வின்படி புகைப்பதினால் தினமும் 300 பேர் கொல்லப்படுகிறார்;கள். இன்னுமோர் ஆய்வின்படி தினமும் இரண்டு சிகரெட்டுக்கு மேல் புகைப்பிடிப்பவர்களில்  நான்கில் ஒருவர் வயதாவதற்கு முன்பே இறக்கிறார்.


புகைத்தலால் பல் வேறுபட்ட நோய்கள் உருவாகின்றன. புகைபிடிப்பதனால் ஏற்படும் நோய்களில் புற்று நோய் குறிப்பிடத்தக்கதாகும். பலவிதமான புற்றுநோய்கள் இருக்கின்றன. பிற புற்று நோய்களைவிட நுரையீரல் புற்று நோயால் அதிகமான மக்கள் மரணமடைகிறார்கள்.90 வீதத்துக்கும் அதிகமான நுரையீரல் புற்றுநோய், புகைப்பிடிப்பதனால் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்த நோய் தொற்றிக் கொள்ளும் அபாயம், புகை பிடிக்காதவர்களைக் காட்டிலும் புகை பிடிப்பவர்களுக்கு 15 மடங்கு அதிகமாகவுள்ளது.
தொண்டை அல்லது வாய்ப் புற்றுநோய் அபாயத்தை புகைப்பிடித்தல் தோற்றுவிக்கிறது. மேலும் புகைப் பிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்கள் உணவுக்குழல், இரைப்பை புற்றுநோயினால் இறக்கும் அபாயம் அதிகம் இருக்கிறது. புகைப்பிடிக்காதவர்களைவிட புகை பிடிப்பவர்கள் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக புற்றுநோய் ஆகியவற்றாலும் தாக்கப்படும் ஆபத்தும் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன.
புகைப்பிடித்தல் இருதய நோய்;களுக்கும் முக்கிய காரணமாக விளங்குகிறது. புகைக்கப்படும் சிகரெட்டின் எண்ணிக்கை அதிகரிக்கும் அளவுக்கு மாரடைப்பு ஏற்றபடுவதற்கான வாய்ப்பும் தீவிரமடைகிறது. சிகரெட்டில் நிகோடின் அடங்கலான 4000 கேடு விளைவிக்கும் இரசயானப் பொருட்கள் இருப்பதாக விஞ்ஞானம் கூறுகிறது.
புற்றுநோய், இருதய நோய்கள் மட்டுமன்றி  புகைப்பிடிப்பதால் அபாயகரமான சுவாசக் கோளாறுகளும் ஏற்படுவதாக அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. மார்புச் சளி, ஆஸ்துமா, எம்பிஸிமா(Emphysema) உட்பட மற்றும் பல சுவாசக் கோளாறு நோய்களை புகைத்தல் தீவிரப்படுத்துகிறது என்பதற்கு போதிய அறிவியல் ஆதாரங்கள் கிடைக்கின்றன.

புகைப்பிடித்தல் இனப்பெருக்க, சுகாதாரத்திற்கும் ஊறுவிளைவிக்கும் என்பதும் மருத்துவம் கூறும் மற்றுமோர்  உண்மையாகும்.
சொத்தைப்பல், பல்விழுதல்,ஈறு வீக்கம், வாயில் துர்நாற்றம் முதலான நோய்களுக்கும் புகைத்தல் காரணமாக அமைகிறது. மேலும் புகைத்தல் நுகர்திறனைக் குறைக்கின்றது. உபயோகிக்கும் மருந்துகளின் பயன்தரும் திறனைக் குறைக்கிறது. குடற்புண் நோய்களை தீவிரப்படுத்துகிறது.

இதுவரை கண்ட விளக்கங்களிலிருந்து புகைபிடித்தல் உடல் நலனை எவ்வாறு கடுமையாகப் பாதிக்கிறது என்பதை விளங்கமுடிகிறது. இவ்வாறு மனிதனின் சுகாதாரத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடியன இஸ்லாமிய நோக்கில் ஹராமானவையாகவே கொள்ளப்படுகின்றன. அல்-குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.


'உங்களை நீங்களே கொல்ல வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிகவும் அன்புடையோனாக இருக்கின்றான்'. (அந்நிஸா:25)
'மேலும் உங்களை நீங்களே அழிவுக்கு உட்படுத்திக் கொள்ளாதீர்கள்' (அல்பகரா195)

மனிதனுக்கு கேடுவிளைவிக்கும் அனைத்தையும் நபிகளார் தடுத்துள்ளார்கள் என்பதற்கு பல ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன. இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களை வகுக்கும்போது கவனத்திற் கொள்ளும் அடிப்படையான விதி, 'நலன்கள் விளைதல் வேண்டும். தீங்குகள், கேடுகள் தவிர்க்கப்படல், அல்லது தடுக்கப்படல் வேண்டும்' என்பதாகும்.
புகைபிடிப்பதானால் விளைகின்ற மூன்று வகையான கேடுகளில் உடல்நலத்திற்கு ஏற்படும் கேடுகளைப் பற்றியே இதுவரைக்கும் கலந்துரையாடினோம். இரண்டாம் வகைக் கேடு பொருள் நஷ்டமாகும்.

(ii)    பொருள் நஷ்டம்:
புகைப்பிடிப்பதனால் பணம் விரயமாகிறது. உடலுக்கோ, ஆன்மாவுக்கோ எத்தகைய பயனுமளிக்காத ஒன்றிற்காக பணம் விரயமாக்கப்படுகிறது. வீண்விரயம் செய்வதை நபியவர்கள் தடுத்துள்ளார்கள்.
'வீண்விரயம் செய்யாதீர்கள், ஏனெனில் மிதமிஞ்சி செலவு செய்வோர் ஷைத்தானுடைய சகோதரர்கள்;'
வீண்விரயம் பற்றி இமாம் இப்னு ஹஸ்ம் பின்வருமாறு கூறியிருக்கிறார்.
வீண்விரயம் செய்வது ஹராமாகும்.(மூன்று வகைப்படும்.)
  1. அல்லாஹ் விலக்கியவற்றில் செலவு செய்வது. அது ஒரு கொசுவின் இறைக்கையளவு அற்பமாக இருப்பினும் சரியே.
  2. அவசியம் தேவையற்ற ஒன்றில் செலவுசெய்தல், இந்தச் செலவினால் குறித்த நபரின் செல்வநிலை அகலும் ஆபத்து ஏற்படும் போது அதுவும் வீண்விரயமாகும்.
  3. செல்வத்தை வீணாக வீசியெரிதல், இது குறைந்தளவுடையதாக இருப்பினும் சரியே..'
(iii)    ஆன்மாவுக்கு ஏற்படும் தீங்கு
புகைத்தலுக்கு பழக்கப்பட்டவர்கள் தமது மனோவலிமையை இழந்து இத்தீய பழக்கத்துக்கு அடிமையாகி விடுகின்றனர்.ஏதோ காரணத்தால் புகைபிடிக்கின்ற சந்தர்ப்பத்தை இழக்கின்ற வேளையில் இத்தகையோரின் நடவடிக்கைகள் எவ்வளவு தூரம் கேவலமானதாகவும் கீழ்த்தரமானதாகவும் அமைகின்றன என்பதை அவதானிக்க முடியும்.

எனவே, சுகாதார கண்ணோட்டத்தில் நோக்கினாலும், பொருளாதார கண்ணோட்டத்தில் பார்த்தாலும் ஆன்மீகக் கண்ணோட்டத்தில் அணுகினாலும் புகைபிடித்தல் ஹராமானது என்ற கருத்தே மிகைத்து, பலமானதாக விளங்குகிறது. அல்லாஹ்வே யாவற்றையும் நன்கு அறிந்தவன்.

Post a Comment

0 Comments