கஜா புயல்: புதுக்கோட்டை மாவட்டத்தை புரட்டிப்போட்டது



கஜா புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் சூறாவளி காற்று வீசியது. மேலும் பல இடங்களில் பலத்த மழையும் பெய்தது. சூறாவளி காற்று மற்றும் மழையால் ஏற்பட்ட சேதத்தால் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகள் புரட்டிப்போட்டது போன்று காட்சியளிக்கின்றன.


ஆவுடையார்கோவில் பகுதியில் பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆவுடையார்கோவிலில் தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள 2 வேப்ப மரங்கள் வேரோடு சாய்ந்து சுற்றுச்சுவர் மற்றும் மின்கம்பத்தின் மீது விழுந்தது. இதில் சுற்றுச்சுவர் இடிந்தது. மின்கம்பமும் உடைந்து விழுந்தது. மேலும் ஆவுடையார்கோவில் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின் வினியோகம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.


கடலோர பகுதிகளான மணமேல்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டுமாவடி, கிருஷ்ணாஜிபட்டினம், பொன்னகரம், காரக்கோட்டை, திணையாகுடி உள்ளிட்ட 32 கிராம பகுதிகளிலும் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. பலத்த காற்று வீசியதால் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் 500-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீட்டின் மேற்கூரைகள் உடைந்து விழுந்தன. தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினர்.

அறந்தாங்கி பகுதியில் வீசிய சூறைக்காற்றால் ஏராளமான மரங்கள் சாய்ந்து சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழை மற்றும் காற்றின் காரணமாக கொட்டகை விழுந்தது உள்ளிட்டவை காரணமாக 3 மாடுகள், 27 ஆட்டுக்குட்டிகள் செத்தன. 51 வீடுகள் சேதமடைந்தன. 30 வீடுகள் முழுமையாக இடிந்தன. மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Post a Comment