கஜாபுயல் பாதித்த மாவட்டங்களான தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவா ரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பயன் பெறும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட நிர்வாகங்கள் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லுாரியில் வருகிற 9ஆம் தேதி காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடை பெற உள்ளது. முகாமில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணி காலியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன.
முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளோமா, ஐ.டி.ஐ, பொறியியல் படிப்பு கல்வி தகுதி வரை உள்ள அனைவரும் தங்களது சுயவிவர குறிப்பு மற்றும் ஆதார் அட்டையுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம். முகாமில் கலந்து கொள்ள எந்தவிதமான கட்டணமும் இல்லை. முகாமில் அரசுப் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள ஆலோசனைகள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் பயிற்சி வகுப்புகளுக்கான பதிவு மற்றும் ஆள்சேர்ப்பு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான ஆலோசனைகள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டம் தொடர்பான முகாம்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நன்றி: தினகரன்