ஐபிஎல் 2019 போட்டியில் ஆடும் தமிழ்நாட்டு வீரர்கள் யார் யார்?



ஐபிஎல் போட்டிகள் இன்று 23/03/2019 சென்னையில் தொடங்கவுள்ளன.

முதல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியும் மோத உள்ளனர். இதனால் ஐபிஎல் திருவிழா நாடு முழுவது களைகட்ட உள்ளது. இந்நிலையில் இந்த ஐபிஎல் போட்டியில் விளையாடும் முக்கிய தமிழ்நாட்டு வீரர்கள் யார்? யார்?

ரவிச்சந்திரன் அஸ்வின்:

ஐபிஎல் தொடக்கத்தில் சென்னை அணிக்காக விளையாடிய அஸ்வின் தனது சிறப்பான பந்துவீச்சால் சென்னை அணியை பல தருணங்களில் வெற்றி பெற வைத்தார். சென்னை இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வெல்லும் போது அஸ்வின் அந்த சீசனில் பெரும் பங்காற்றினார். அதன்பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில் இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஒப்பந்தமானார். 

மேலும் கிங்ஸ் லெவன் அணியின் கேப்டனாகவும் இருந்து வருகிறார் அஸ்வின். இதுவரை இவர் 125 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் இவர் 110 விக்கெட்டுகளும், 333 ரன்களும் எடுத்துள்ளார். இம்முறை ஐபிஎல் போட்டியில் சுழலில் கலக்க ஆயத்தமாகி வருகிறார் இவர்.

தினேஷ் கார்த்திக்:

தமிழ்நாடு அணியிலிருக்கும் மூத்த வீரர் தினேஷ் கார்த்திக். இவர் முதல் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடினார். 2013 ஆம் ஆண்டு கார்த்திக் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அந்தத் தொடரில் மும்பை அணி ஐபில் கோப்பை கைப்பற்றியது. அதில் முக்கிய பங்கு தினேஷ் கார்த்திக்கையே சேரும். 

ஏனென்றால் அவர் 2013 ஐபிஎல் தொடரில் 510 ரன்கள் விளாசி மும்பை அணியின் வெற்றிக்கு வித்திட்டார். கடந்த 2018 ஐபிஎல் தொடரில் இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்துவருகிறார். 

இவர் 168 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 3401 ரன்கள் எடுத்துள்ளார். இந்தாண்டு உலகக் கோப்பை அணியில் தினேஷ் இடம்பெறும் வாய்ப்புள்ளதால் ஐபிஎல் போட்டிகளில் அவர் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சங்கர்:

சமீபத்தில் இந்திய அணியில் இடம்பிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் விஜய் சங்கர். இவர் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக நடந்த போட்டிகளில் அசத்தலாக ஆடினார். இதனால் இவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் இந்த ஐபிஎல் அவருக்கு மிகவும் முக்கியதுவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதுவரை விஜய் சங்கர் 18 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 313 ரன்கள் குவித்துள்ளார். இம்முறை விஜய் சங்கர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாடவுள்ளார்.

முரளி விஜய்:

தமிழ்நாடு அணியின் துவக்க ஆட்டக்காரரான முரளி விஜய் இந்தப் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். இவர் இதுவரை 168 ஐபிஎல் போட்டிகளில் 2523 ரன்கள் குவித்துள்ளார். 

முருகன் அஸ்வின்:

முருகன் அஸ்வின் தமிழ்நாடு அணியின் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர். இவர் இம்முறை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடவுள்ளார். இவர் 12 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று 10 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

தங்கராசு நடராஜன்:

தமிழ்நாடு அணியின் வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜன். இவர் 2017 ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடினார். இவர் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடவுள்ளார். நடராஜன் 6 ஐபிஎல் போட்டிகளில் 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

சி.வருண்:

வருண்தான் இந்த ஐபிஎல் தொடரில் உற்றுநோக்க கூடிய வீரர்களில் ஒருவர். ஏனென்றால் இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் 8.4 கோடி ரூபாய்க்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் எடுக்கப்பட்டுள்ளார். இவர் வலது கை சுழற்பந்துவீச்சாளர். இவர் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் அசத்தியதால் தற்போது ஐபிஎல் அணிக்கு தேர்வாகியுள்ளார். இதுவே அவரின் முதல் ஐபிஎல் தொடர் என்பதால் அவர் மீது அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

Post a Comment

0 Comments