கண்காணிப்புக் குழுவினர் எடுக்கும் வீடியோவை பணம் செலுத்தி பெறலாம்: ஆட்சியர் தகவல்



மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், புகார்களின் பேரிலான ஆய்வுகள் ஆகியவற்றின் வீடியோ காட்சியை தேவைப்படுவோர் பணம் கட்டி வாங்கிக் கொள்ளலாம் என மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மக்களவைத் தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப். 18 வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. நேர்மையான நியாயமான வாக்குப்பதிவுக்காக பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தலா 3 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள் மற்றும் புகாரின் பேரில் நடத்தப்படும் சோதனைகள் ஆகியவற்றை இந்தக் குழுவிலுள்ள ஒளிப்பதிவாளர் விடியோ பதிவு செய்வார்.
கண்காணிப்பும் நேர்மையாக இருக்கிறது என்பதை உறுதி செய்யும் வகையில் விடியோ காட்சிகளை பொதுமக்களும் கூட குறுந்தகடாக வாங்கிப் பார்க்கலாம்.

குறிப்பிட்ட ஒளிப்பதிவை பார்க்க விரும்புவோர், குறிப்பிட்ட சட்டப்பேரவைத் தொகுதி பெயர், நாள், நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, தேர்தல் நடத்தும் அலுவலரை நேரில் சந்தித்து ஒரு குறுந்தகட்டுக்கு ரூ. 300 கட்டணமாகச் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments