பிறந்து 12 நாளே ஆன குழந்தைக்கு வயிற்றில் 2 அறுவை சிகிச்சை புதுக்கோட்டை அரசு மருத்துவர்கள் சாதனை



பிறந்து 12 நாட்களே ஆன குழந்தைக்கு வயிற்றில் 2 அறுவை சிகிச்சை செய்து புதுக்கோட்டை அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசரடிபட்டி பகுதியை சோர்ந்த முருகேசன்- வினிதா தம்பதியினருக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. இரண்டு நாட்களே ஆனநிலையில் குழந்தையின் வயிறு பெரிதாக காணப்பட்டதால் மருத்துவர்கள் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்து பார்த்தனர். அப்பொழுது குழந்தைக்கு பிறவியிலேயே ஏற்பட்ட கோளாறு காரணமாக 10 செ.மீ அளவிற்கு சிறுகுடல் இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் சிறுகுடலின் ஆரம்பப் பகுதிகளில் வீக்கமாகவும் பின்பகுதிகள் மெலிந்தும் காணப்பட்டன. எனவே அறுவை சிகிச்சை மூலம் இதை சரிசெய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

 அதன்படி மயக்கமருத்துவர்கள் ரவிக்குமார், கணேசன், ரவீந்திரன் மற்றும் குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். பிறந்து மூன்றே நாட்களில் நடந்த அறுவை சிகிச்சையின் மூலம் வளர்ச்சி பெறாத குடல் பகுதி வெட்டப்பட்டு அது இரண்டு துவாரங்களாக வயிற்றுக்கு வெளியேவைக்கப்பட்டது பத்து நாட்கள் சிகிச்சையின் மூலம் அடைப்பிற்கு முன்னால் உள்ள பகுதியும் பின்பகுதியும் சமநிலைக்கு கொண்டுவரப்பட்டன.

 எனவே இரண்டு பகுதிகளையும் இணைப்பதற்கு மருத்துவர்கள் முடிவெடுத்து 12வது நாள் இரண்டாவது அறுவை சிகிச்சை செய்தனர். இதன் மூலம் இயல்பாக காணப்பட்ட குடலின் முன்பகுதியும், பின்பகுதியும் இணைக்கப்பட்டு வயிற்றுக்கு உள்ளே வைக்கப்பட்டது.இரண்டாவது அறுவை சிகிச்சை முடிந்த பத்தாவது நாள் குழந்தை இயல்பாக தாய்ப்பால் அருந்த துவங்கியது.

இதுகுறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் மீனாட்சிசுந்தரம் கூறியதாவது:

கருவில் வளரும் குழந்தைக்கு ஏதேனும் ஒருபகுதியில் திடீரென ரத்தஓட்டம் தடைபெறுவதால் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் குடலில் வளர்ச்சி அடையாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன. அந்த வகையில் இந்த குழந்தைக்கு 10 சென்டி மீட்டர் அளவிற்கு வளராமல் காணப்பட்டது. இதற்கு உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதனால் சிதைந்து போன குடற்பகுதி இருதுவாரங்களாக வெளியே வைக்கப்பட்டன.

 அவ்வாறு பத்து நாட்கள் சிகிச்சை அளித்த பின்னர் மீண்டும் அந்த குடல் பகுதிகளை இணைத்து இருப்பது மருத்துவ உலகில் ஒரு பெரிய சாதனை.

 தனியார் மருத்துவமனைகளில் ஒன்றரை லட்சம் வரை செலவாக கூடிய இந்த சிகிச்சை இங்கு இலவசமாக செய்யப்பட்டுள்ளது என்றார்.

Post a Comment

0 Comments