புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை 13-ஆம் தேதி ரேஷன் குறைதீர்க்கும் கூட்டம்



புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 13ம்தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

பொது விநியோகத்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு கிராமத்தில் ஒவ்வொரு மாதமும் 2ம் வாரத்தில் சனிக்கிழமை காலை 10 முதல் மதியம் 1மணி வரை அந்தந்த கிராமத்தில் உள்ள குடும்ப அட்டைகள், நியாய விலைக்கடை தொடர்பான குறைகள் தீர்க்கும் பொருட்டு தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

எனவே, ஜுலை 2019ம் மாதத்திற்கான பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் கூட்டம் வரும் 13ம்தேதி அன்று நடைபெற உள்ளது.இந்தக் கூட்டத்தில் தொடர்புடைய கூட்டுறவுச் சங்க தனி அலுவலர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நுகர்வோர் குழுக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டரால், துணை கலெக்டர் நிலையில் நியமிக்கப்படும் அலுவலர் ஒருவர் பார்வையாளராக இருப்பார்.

அந்த வகையில் புதுக்கோட்டை வட்டம் புத்தாம்பூர் கிராமம், ஆலங்குடி வட்டம் முடுக்குவயல் கிராமம், திருமயம் வட்டம் அகவயல் கிராமம், குளத்தூர் வட்டம் வடுகப்பட்டி கிராமம், இலுப்பூர் வட்டம் மாம்பட்டி கிராமம், கந்தர்வகோட்டை வட்டம் நெப்புகை கிராமம், அறந்தாங்கி வட்டம் தர்மராஜன் வயல் கிராமம், ஆவுடையார்கோவில் வட்டம் தாளிக்காடு கிராமம், மணமேல்குடி வட்டம் சிலாத்தனி கிராமம், பொன்னமராவதி வட்டம் கொன்னையூர் கிராமம், கறம்பக்குடி வட்டம் மைலன்கோன்பட்டி கிராமம், விராலிமலை வட்டம் மேபூதகுடி கிராமங்களில் நடைபெற உள்ள பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள், குறிப்பாக குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு நியாயவிலை கடைகளின் செயல்பாடுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் தங்களுக்குள்ள இடர்பாடுகள் குறித்து எடுத்துக்கூறி பயன் பெறலாம்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments