புதுகை மாவட்ட குறு,சிறு தொழில் நிறுவனங்கள் தரச்சான்றிதழ் பெற மானியம்! மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி தகவல்



குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான சர்வதேச தரச் சான்றிதழ் பெற சிறப்பு மானியத் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசு சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் சர்வதேச போட்டித் தன்மையினை மேம்படுத்தவும், உலகளாவிய சந்தையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு ஏதுவாக இந்நிறுவனங்கள் சர்வதேச தரச் சான்றிதழ்கள் பெற ஏற்படும் செலவின் தொகையில் ஒவ்வொரு சான்றிதழுக்கும் 100 சதவிகிதம் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை ஈடு செய்யும்  திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்நிறுவனங்கள் சான்றிதழ் அமைப்புகளுக்கான தேசிய அங்கீகார வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் மூலமாக சர்வதேச தரச்சான்று  பெற்றிருத்தல் அவசியம்.

தர நிர்ணய சான்றிதழ் பெற்ற நாளிலிருந்து ஒரு ஆண்டுக்குள் புதுக்கோட்டை மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் இம்மானியத்தைப் பெற விண்ணப்பிக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ள தொழில் நிறுவனங்கள் ஒவ்வொரு கிளைக்கும் தனித்தனியாக மானியம் பெற விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு  மாவட்டத் தொழில் மையம் பொதுமேலாளர் அலுவலகத்தை அணுகலாம்.

Post a Comment

0 Comments