கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது



புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த எஸ். அந்தோனிராஜ் (39), என். கோவிந்தன் (60), கே. செல்வம் (45), ஜ. நவாஸ் (25) ஆகிய நால்வரும் அந்தோனிராஜுவுக்குச் சொந்தமான ஒரு விசைப்படகில் புதன்கிழமை காலை மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

இவர்கள் நால்வரையும் நெடுந்தீவு அருகே சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர்.

நால்வரையும் இலங்கை காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்க வைத்து விசாரணை நடத்தப்படுவதாக மீமிசல் கடற்கரை காவல் படையினர் தெரிவித்தனர்.

புதன்கிழமை மட்டும், கோட்டைப்பட்டினத்தில் இருந்து 142 விசைப்படகுகள் உரிய அனுமதி பெற்று மீன்பிடிக்கச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments