புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சட்டப்பேரவை மனுக்கள் குழுவுக்கு கோரிக்கைகளை அனுப்பலாம்...



தமிழ்நாடு சட்டப் பேரவையின் 2018 -20 ஆம் ஆண்டுக்கான மனுக்கள் குழு புதுக்கோட்டை மாவட்டத்தில் விரைவில் கூட உள்ளதால், இதுவரை தீர்க்கப்படாத பிரச்னைகள் குறித்து வரும் ஆக. 16 ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சட்டப் பேரவையின் 2018-2020 ஆம் ஆண்டுகளுக்கான மனுக்கள் குழு புதுக்கோட்டை மாவட்டத்தில் விரைவில் கூடுவதென முடிவு செய்துள்ளது. இதனையொட்டி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ, தீர்க்கப்பட வேண்டிய பொதுப் பிரச்னைகள், குறைகள் குறித்து மனுக்களை (ஐந்து நகல்கள் தமிழில் மட்டும்) தேதியுடன் கையொப்பமிட்டு, தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டப் பேரவை, சென்னை - 600 009 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருக்க வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப் பிரச்னைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம். மனுக்கள் ஒரேயொரு பிரச்னையை உள்ளடக்கியதாகவும், ஒரேயொரு துறையைச் சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும்.

மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். சட்டப் பேரவை விதிகளின் வரம்பிற்குட்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும். ஒரே மனுதாரர் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனு மட்டுமே ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படும்.  அந்த நேரத்தில் மனுதாரர் முன்னிலையில் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உண்மை நிலவரம் கேட்டறியப்படும். இதுகுறித்து மனுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பப்படும். ஆக. 16ஆம் தேதிக்குப் பிறகு பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படாது.

Post a Comment

0 Comments